Kantara Chapter 1 First Review: காந்தாரா சாப்டர் 1 முதல் விமர்சனம்.. ரிஷப் ஷெட்டியின் இயக்கம் எப்படி?
பெங்களூர்: ஹோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில், ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா சாப்டர் 1' திரைப்படம், இன்று மாலை ப்ரீமியர் காட்சிகளுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 2ம் தேதியான நாளை உலகம் முழுவதும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படத்தில், ருக்மணி வசந்த் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயராம், குல்ஷன் தேவையா, ராகேஷ் பூஜாரி போன்ற நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் உள்ளனர்.

இப்படத்தை சலுவே கௌடா இணைந்து தயாரித்துள்ளார். அரவிந்த் கஷ்யப் ஒளிப்பதிவு செய்ய, கே.எம். பிரகாஷ் மற்றும் ஷோபித் ஷெட்டி படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியால், இந்தப் படத்தின் வணிக ரீதியான மற்றும் கதை தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
காந்தாரா சாப்டர் 1 முதல் விமர்சனம்: சமீபத்தில் நடந்த தணிக்கை குழு மறுஆய்வில், படக்குழுவினர் மகிழ்ச்சியான கருத்துக்களைப் பெற்றுள்ளனர். 'காந்தாரா சாப்டர் 1' கர்நாடகாவின் தொலைதூரப் பகுதியில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டில், முதல் கன்னட வம்சமான கதம்ப வம்சத்தை மையமாகக் கொண்ட கதையாகும். விஜயேந்திர மன்னரின் ஆட்சியில், தெய்வீக சக்திக்கும் ஒரு ராணிக்கும் இடையிலான உணர்ச்சிப்பூர்வமான மோதலே இதன் மையக் கதை.
அந்த காலகட்டத்தின் கலாச்சாரங்கள், சடங்குகள், மக்களின் மூடநம்பிக்கைகள் மற்றும் பக்தி ஆகியவற்றை இந்த கதை பேசுகிறது. ஒரு இளவரசிக்கும் (ருக்மணி வசந்த்) ஒரு கிராம இளைஞனுக்கும் இடையிலான காதல், அதன் மீது ராஜ குடும்பத்தின் தாக்கம் எப்படி இருந்தது என்பதும் கதையின் ஒரு பகுதியாக அமைகிறது. இப்படத்தின் பின்னணி அமைப்பு மற்றும் காட்சி அமைப்புகள் பெரும் பலமாகப் பார்க்கப்படுகின்றன.
ரிஷப் ஷெட்டி கலக்கிவிட்டார்: ரிஷப் ஷெட்டியின் அற்புதமான நடிப்பு மற்றும் அஜனீஷின் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. தணிக்கை குழு உறுப்பினர்கள், ரிஷப் ஷெட்டி கதையைத் திரையில் கொண்டு வந்த விதம், ருக்மணி வசந்த் கதாபாத்திரத்தை கையாண்ட விதம் ஆகியவற்றால் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். இது ஒரு புதிய உலகத்தை உருவாக்குவதோடு, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
மற்ற வழக்கமான படங்களிலிருந்து இது வேறுபட்டுள்ளதாகவும், பார்வையாளர்கள் இதை எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அமையும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் குடும்பப் பார்வையாளர்களைக் கவரும் அம்சங்கள் அதிகம் உள்ளன. த்ரில்லர், ஆக்ஷன் மற்றும் சஸ்பென்ஸ் கூறுகள் படத்திற்கு சுவாரஸ்யம் சேர்க்கின்றன.
பாக்ஸ் ஆபீஸ் வெற்றியடையுமா?: ஒரு காட்சியை நீக்குமாறு தணிக்கை குழு பரிந்துரைத்த நிலையில், அத்தகைய ஒரு மாற்றத்துடன் படத்திற்கு "யு/ஏ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'காந்தாரா சாப்டர் 1' சமீபத்திய கன்னடத் திரைப்படங்களில் அதிக நீளமுள்ள படங்களில் ஒன்றாகும். தணிக்கை குழுவின் ஒப்புதலின்படி, இப்படத்தின் நீளம் 169 நிமிடங்கள், அதாவது 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஆகும்.
முதல் கன்னட வம்சத்தின் வரலாறு மற்றும் கதாபாத்திரங்களை தெளிவாக நிறுவ வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், படத்தின் நீளம் அதிகரித்தது என்று படக்குழுவினர் விளக்கமளித்தனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காந்தாரா திரைப்படம் 400 கோடி வசூலை ஈட்ட முக்கிய காரணமே இந்தி ரசிகர்களை படம் கவர்ந்தது தான். அதே அளவுக்கு காந்தாரா சாப்டர் 1 படமும் கன்னடம் மற்றும் இந்தி ரசிகர்களை கவர்ந்துவிட்டால் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











