25வது நாளில் 200 கோடி வசூல்… பாக்ஸ் ஆபிஸில் கேஜிஎஃப் படத்துக்கு தண்ணி காட்டிய காந்தாரா…
பெங்களூரு: கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி அவரே ஹீரோவாக நடித்துள்ள 'காந்தாரா' திரைப்படம், கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
ஜோம்பலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'காந்தாரா' ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ள காந்தாரா படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மிரட்டும் காந்தாரா
ரிஷப் ஷெட்டி இயக்கியுள்ள 'காந்தாரா' திரைப்படம் கடந்த மாதம் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குநராக மட்டும் இல்லாமல் ரிஷப் ஷெட்டியே ஹீரோவாக நடித்துள்ள காந்தாரா, பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. யாருமே எதிர்பார்க்காத வகையில் 'காந்தாரா' படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் படமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ரிஷப் ஷெட்டியின் நடிப்பு, மேக்கிங், சினிமோட்டோகிராபி, இசை உட்பட டெக்னிக்கலாகவும் 'காந்தாரா' படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

வெற்றிகரமான 25வது நாள்
செப்டம்பர் 30ம் தேதி வெளியான 'காந்தாரா' திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை கடந்துள்ளது. தமிழில் பொன்னியின் செல்வன், தெலுங்கில் காட்ஃபாதர் என மெகா பட்ஜெட் படங்கள் வெளியான போதும், காந்தாரா படத்திற்கு ரசிகர்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கேஜிஎஃப்-க்குப் பிறகு அனைத்து மொழி ரசிகர்களிடம் காந்தாரா படத்திற்கு பயங்கரமான வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 25 நாட்களை கடந்த பின்னரும் தொடர்ந்து டிக்கெட் புக்கிங் அதகளம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

200 கோடி வசூல்
இதனிடையே, காந்தாரா இதுவரை 220 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் காந்தாரா படத்துக்கு இந்தளவு வசூல் கிடைக்கும் என யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். காரணம், இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே 16 கோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் 200 கோடிக்கு மேல் வசூலித்த ஆர்.ஆர்.ஆர், கேஜிஎஃப், பொன்னியின் செல்வன் படங்களின் பட்ஜெட்டை ஒப்பிடும் போது காந்தாராவின் பட்ஜெட் ஒன்றுமே இல்லை என கூறலாம். 16 கோடி பட்ஜெட்டில் உருவான காந்தாரா, 200 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது பிரம்மாண்ட இயக்குநர்களையே தலைசுற்ற வைத்துள்ளது.

சர்ச்சைகளும் ஆதரவும்
காடுகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பின்னணியில் 'காந்தாரா' உருவாகியுள்ளது. அரசுக்கும் ஆதி குடிகளுக்கும் இடையேயான அதிகார மோதல், உரிமைகள் மீட்பு என்பது தான் காந்தாராவின் ஒருவரிக் கதை. ஆனால், இதில் சில முரண்பாடுகள் இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இருப்பினும் காந்தாரா ஒரு கலைப்படைப்பு என திரை விமர்சகர்கள் தங்களது கருத்துகளை முன் வைத்துள்ளனர். ஒருபக்கம் விமர்சனங்கள், இன்னொரு பக்கம் ரசிகர்களிடம் வரவேற்பு என காந்தாரா திரையுலகையே மிரட்டி வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











