“ஒன்னு இங்க இருக்கு.. இன்னொன்னு எங்க?”-னு தேடினோம்ல... அதுக்கு விடை தெரியப் போகுது!
கரகாட்டக்காரன் படத்தின் 2ம் பாகம் ரெடியாக இருக்கிறது.
சென்னை: கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கைஅமரன் முடிவு செய்துள்ளார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த படம் கரகாட்டக்காரன். கங்கைஅமரன் இயக்கி இருந்த இப்படம் பட்டிதொட்டியெங்கும் வெற்றிநடைப் போட்டது. தில்லானா மோகனாம்பாளின் மாடர்ன் வெர்சன் தான் இப்படம் என்ற விமர்சனம் இருந்தாலும், கிராமத்து மணம் வீசிய இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா எனப் பலருக்கு இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தித் தந்தது.

வாழைப்பழ காமெடி:
இப்படத்தின் பாடல்களைப் போலவே காமெடியும் இன்றளவும் பிரபலம். அதிலும் குறிப்பாக அந்த வாழைப்பழ காமெடி மற்றும் சொப்பனசுந்தரி கார் காமெடியை இப்போதும் நெட்டிசன்கள் டிரெண்டிங்கில் வைத்துள்ளனர்.

2ம் பாகம்:
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கங்கை அமரன் திட்டமிட்டுள்ளார். இரண்டாம் பாகத்திற்கான கதை, திரைக்கதை கூட தயாராக இருக்கிறதாம். முதல்பாகத்தில் நடித்த நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேய்க்கதை:
முதல் பாகத்தில் காதல், கரகாட்டக்கலை, குடும்ப பாசம் பற்றிப் பேசியது கதைக்களம். இரண்டாம் பாகத்தில் அதோடு கூடுதலாக பேய் ஒன்றும் சேர்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கரகாட்டக்குழு தங்க வைக்கப்படும் கட்டிடத்தில் கரகாட்டக்காரியின் ஆவி இருப்பதாகவும், அது செய்யும் அட்டகாசங்கள் தான் படத்தின் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

செந்தில் கவுண்டமணி ஜோடி:
இப்போதைய டிரெண்டிங்கிற்கு ஏற்ப படத்தில் பேயை சேர்க்கத் திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. கரகாட்டக்காரன் 2 எடுக்கப்பட்டால் செந்தில் கவுண்டமணி ஜோடி மீண்டும் அதில் சேர்ந்து நடிப்பர் என பேட்டி ஒன்றில் கங்கை அமரன் தெரிவித்திருப்பதால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











