வாள் வெட்டுறதுக்காக மட்டும்தான் இருக்கா? தனுஷின் கர்ணன் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ்!
சென்னை: கர்ணன் படம் தென் மாவட்ட கலவரங்கள் பற்றிப் பேசவில்லை என்று இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து இயக்கும் படம், கர்ணன். இதில் தனுஷ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
கலைப்புலி எஸ்.தாணு, தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயண் இசை அமைக்கிறார்.

தனுஷின் தோற்றம்
மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தனுஷ் ஜோடியாக நடிக்கிறார். நடிகர் லால், நட்டி, காமெடி நடிகர் யோகிபாபு, '96' படத்தில் குட்டி ஜானுவாக நடித்த கெளரி கிஷன் உட்பட பலர் நடிக்கின்றனர். திருநெல்வேலி அருகே பிரமாண்ட செட் அமைத்து இதன் ஷூட்டிங் நடந்து வந்தது. இந்தப் படத்தில் தனுஷின் தோற்றத்தை நடிகர் லால் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். இது வரவேற்பை பெற்றது.

குதிரையுடன் தனுஷ்
அந்தத் தோற்றத்தில் தனுஷ், லாலின் அருகில் அப்பாவியாக நிற்கிறார். யேமன், கர்ணன் என்று கேப்ஷன் கொடுத்திருந்தார், லால். இதுவரை 90 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டோம் என்று கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் தனுஷ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். குதிரையுடன் நிற்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.

தென்மாவட்ட கலவரம்
படம் பற்றி இயக்குனர் மாரி செல்வராஜ் கூறும்போது, 'இது எளிய மக்களின் வாழ்க்கையை பேசும்படம். ஒரு கிராமத்து மக்கள் சந்திக்கும் பிரச்னைகள்தான் கதை. இது தென்மாவட்ட கலவரங்கள் பற்றிய படமாக நிச்சயம் இருக்காது. இது புனைவு. சில உண்மைச் சம்பவங்களும் இதற்குள் இருக்கும். கர்ணன் படத்தில் தனுஷ் வாள் ஏந்தி இருக்கிறாரே ஏன் என்று கேட்கிறார்கள்.

வன்முறை மீது
அது எதற்கு என்பதை அறிய படம் ரிலீஸ் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். வாள் என்பது வெட்டுவதற்காக மட்டும் இல்லை. எனக்கு வன்முறை மீது துளியும் விருப்பம் இல்லை. இந்த படத்தின் நாயகன் கர்ணனின் தேவை என்ன? கோபம் என்ன என்பது படம் பார்க்கும்போது தெரியும். நான் கலைத்திறனை முக்கியமான ஆயுதமாக நம்புகிறேன். அதன் வழியாக மட்டுமே மக்களுடன் பேச விரும்புகிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











