கொரோனாவை விரட்ட ட்ரோன் மூலம் கிருமி நாசினி: பலே ஐடியா கொடுத்த அஜித்.. பாராட்டி தள்ளிய துணை முதல்வர்!
சென்னை: ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் யோசனையை சொன்ன நடிகர் அஜித்குமாரை, கர்நாடாக துணை முதலமைச்சர் பாராட்டியுள்ளார்.
உலகளவில் பல லட்சம் உயிர்களை பலி கொண்டுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவையும் படாத பாடுபடுத்தி வருகிறது.
இந்தியாவிலும் இதன் தாக்கம் கடுமையாக இருக்கிறது. இந்த தொற்றால் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

கோர தாண்டவம்
இதைக் கட்டுப்படுத்த லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதிலும், சென்னையில் தான் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இந்த வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார்
இந்நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள ரெட் ஸோன் பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்தால் வைரசை அழிக்க முடியும் என்று நடிகர் அஜித்குமார் யோசனை தெரிவித்திருந்தார். அஜித் தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த, தக்ஷா குழுவினர் உருவாக்கிய ட்ரோன்கள் ஏற்கனவே இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்றன.

கிருமி நாசினி
ஆஸ்திரேலியாவிலும் பரிசு வென்றது. இந்த ட்ரோன்களை வைத்து கொரோனா பரவல் அதிகம் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கலாம் என்று நடிகர் அஜித்குமார் யோசனை தெரிவித்தார். இந்த ட்ரோன்கள் 30 நிமிடத்தில் 16 லிட்டர் கிருமி நாசினியை தெளிக்கும் திறன் கொண்டவை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இதை ஏற்ற அதிகாரிகள், ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.

டாக்டர் கார்த்திக் நாராயண்
இந்த தகவலை, இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர் கார்த்திக் நாராயண் என்பவர் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இதையடுத்து நடிகர் அஜித்தை அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டினர். இந்நிலையில், இதே போல கர்நாடகாவிலும் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியைத் தொடங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண்.

தக்ஷாவுக்கு பாராட்டு
அதில், கோவிட்-19-ஐ கட்டுப்படுத்த, கிருமி நாசினி தெளிக்க, ட்ரோன் மூலம் வழியை உருவாக்கியதற்கு, நடிகர் அஜித்குமாரின் வழிகாட்டுதலில் செயல்பட்ட தக்ஷா அணியினருக்குப் பாராட்டுகள். கோவிட்-19-க்கு எதிரான போராட்டத்தில் தொழில்நுட்பத்தின் பங்கு முக்கியமானதாக இருப்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். இதையடுத்தும் நடிகர் அஜித்குமாரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











