"முடிவு பண்ணிட்டா பின்வாங்காத கமல், அரசியலுக்கு வரலாம்" - நடிகர் கார்த்தி கருத்து!
ஐதராபாத் : நடிகர்கள் கமல்ஹாசன், விஷால் ஆகியோர் அரசியலுக்கு வரலாம் என, 'காக்கி' பட பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் கூறியுள்ளார் நடிகர் கார்த்தி.
தமிழ்த் திரையுலகத்திலிருந்து அடுத்து எந்த நடிகர் அரசியலுக்கு வரப் போகிறார் என அரசியல் உலகிலும், திரையுலகிலும் பலரும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் 20 வருடங்களாகவே அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்பதை சஸ்பென்ஸாகவே வைத்திருக்கிறார். அவருக்கு முன்னதாக கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து விடுவார் போலிருக்கிறது.

பத்திரிகையாளர் சந்திப்பு
கார்த்தி நடித்துள்ள 'தீரன் அதிகாரன் ஒன்று' படத்தின் தெலுங்கு பதிப்பான 'காக்கி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது கார்த்தியிடம் அரசியல் சம்பந்தமான சில கேள்விகள் கேட்கப்பட்டன.

அரசியலுக்கு வருவாரா கார்த்தி
கார்த்தியிடம் அரசியலுக்கு வருவீர்களா மாட்டீர்களா எனக் கேட்டதற்கு, 'எனக்குக் கல்யாணம் ஆகிடுச்சு, அரசியலுக்கு வர்றதுக்கு எனக்கு நேரமில்லை' என நகைச்சுவையாக பதிலளித்தார்.

விஷால் அரசியல்
அடுத்து, கமல்ஹாசன், விஷால் ஆகியோரின் அரசியல் பிரவேசம் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'விஷாலுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை, அரசியல் அவருக்குப் பொருத்தமா இருக்கும்.' எனக் கூறினார் கார்த்தி.

பின்வாங்கமாட்டார் கமல்
'கமல்ஹாசன் ஒரு நல்ல அரசியல்வாதியாக வரலாம். கமல் ஒரு விஷயத்தை பேசினாலோ, செய்தாலோ அவர் அது பற்றி சரியான ஆராய்ச்சி பண்ணிட்டுத்தான் செய்வார். அதைச் செய்வதற்கு முடிவு பண்ணி அவர் இறங்கிட்டால், திரும்ப அதில் இருந்து பின் வாங்க மாட்டார்.

எளிதில் அணுக முடியும்
கமல் அரசியலுக்கு வந்தால் மக்கள் அவரை எளிதில் அணுக முடியும் என்று நான் நினைக்கிறேன்' என கருத்து தெரிவித்தார். ரஜினி, விஜய் உள்ளிட்ட நடிகர்களின் அரசியல் பிரவேசம் பற்றி கார்த்தி எதுவும் சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications











