தயாரிப்பாளர் இயக்குனர் கருத்து வேறுபாடு... சிக்கலில் கார்த்தியின் "கஷ்மோரா"
சென்னை: தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்தியின் கஷ்மோரா திரைப்படம் பாதியில் நிற்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
மேலும் இரு தரப்பினருமே விட்டுக் கொடுக்க முன்வராததால் தொடர்ந்து படப்பிடிப்பு நடப்பது சாத்தியமா? என்ற சந்தேகமும் திரையுலகில் எழுந்துள்ளது.
கொம்பன் படத்திற்குப் பின்பு ஆரம்பித்த கஷ்மோரா திரைப்படத்தில் 2 வேடங்களில் கார்த்தி நடிப்பதாக வெளியான தகவல்கள் ரசிகர்களின் மத்தியில் படத்திற்கு மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாமல் அப்படியே தேங்கி நிற்கிறது, இரு தரப்பினருக்கும் இடையே என்ன சிக்கல் என்பதை கீழே காணலாம்.

கோகுலின் இயக்கத்தில்
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கோகுல் தற்போது கார்த்தி, நயன்தாரா மற்றும் ஸ்ரீதிவ்யா நடிப்பில் கஷ்மோரா திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

நின்று போன படப்பிடிப்பு
கஷ்மோரா படத்தின் படப்பிடிப்பு ஐம்பது சதவீதம் முடிவடைந்த நிலையில் மேற்கொண்டு படத்தின் படப்பிடிப்பு தொடராமல் பாதியிலே நின்று கொண்டிருக்கிறது.

காரணம் என்ன
இந்த தாமதத்திற்கு காரணம் தயாரிப்பாளர் தரப்புக்கும், இயக்குநருக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு தானாம். பேய்ப்படமாக உருவாகி வரும் கஷ்மோராவில் சிஜி வேலைகள் அதிகம் இருக்கின்றன என்று கூறுகின்றனர்.

இரண்டாம் பாதி - செலவு அதிகம்
இந்தப்படத்தின் இரண்டாவது பாதியை படமாக்கினால் திட்டமிட்டதைவிட அதிகச் செலவாகும் என்று தெரிகிறதாம். அதனால், இரண்டாம் பாதிக்கதையில் மாற்றங்கள் செய்யவேண்டும் என்று தயாரிப்பாளர்தரப்பு விரும்புவதாகவும், இயக்குநரோ கதையை மாற்றினால் நன்றாக இருக்காது என்று சொல்வதாகவும் சொல்லப்படுகிறது. இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அடுத்தகட்டப் படப்பிடிப்பைத் திட்டமிடுவதில் தாமதம் ஏற்படுகிறது என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திய பேயா பார்க்கலாம்னு ஆசைப்பட்டா, கடைசில இப்படி ஆகிடுச்சே...


Click it and Unblock the Notifications











