வாவ் இதுதான் செம கிளாஷ்.. மே 1ம் தேதி மோதிக்கொள்ளப் போகும் பொன்னியின் செல்வன் ஹீரோக்கள்!
சென்னை: ஜெயம் ரவி மற்றும் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படங்கள் உழைப்பாளர் தினத்தன்று மோதிக் கொள்ளவுள்ளன.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவனாகவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் மே 1ம் தேதி ஜெயம் ரவியின் பூமி மற்றும் கார்த்தியின் சுல்தான் படங்கள் ரிலீசாகவுள்ளன.

ஜெயம் ரவியின் பூமி
ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்தி அகர்வால் நடிப்பில் உருவாகி வரும் பூமி படம் வரும் மே 1ம் தேதி உழைப்பாளர் தின ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் ஜெயம் ரவி நேற்று முன் தினம் தனது ட்விட்டரில் அறிவித்தார்.

சுல்தான்
ரெமோ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் நீண்ட நாட்களாக உருவாகி வரும் சுல்தான் படமும் வரும் மே 1ம் தேதி ரிலீஸை குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யார் ஜெயிப்பா?
உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி கார்த்தியின் சுல்தான் மற்றும் ஜெயம் ரவியின் பூமி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால், யார் ஜெயிப்பா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில், இருவரும் ஒன்றாக மோதினால் மிகப்பெரிய கிளாஷாக அது மாறும் என தெரிகிறது.

தீபாவளி கிளாஷ்
ஏற்கனவே கடந்த தீபாவளியன்று தளபதி விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்கள் மோதின. பிகில் படம் கமர்ஷியலாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. கைதி படம் கமர்ஷியல் மற்றும் விமர்சன ரீதியாகவும் வெற்றியை குவித்தது குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற கிளாஷ் இந்த ஆண்டு மே 1ம் தேதியும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் வரலாற்று படமான பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் முதன்முறையாக இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சியான் விக்ரம் ஜெயம் ரவியின் அண்ணன் ஆதித்த கரிகாலனாகவும், கார்த்தி நண்பன் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.

ராஷ்மிகா மந்தனா
ரெமோ படத்தைத் தொடர்ந்து பாக்யராஜ் கண்ணன் உருவாக்கி வரும் வித்தியாசமான படம் சுல்தான். காமெடி, லவ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்து காட்டி ஒரு மாஸ் பேக்கேஜ்ஜாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா தமிழில் அறிமுகமாகவுள்ளார்.


Click it and Unblock the Notifications











