யாராக இருந்தாலும் விவசாயியாக இருப்பது முக்கியம்... எல்லாம் அதுக்காக தான்: எமோஷனலான கார்த்தி
சென்னை: முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி தற்போது ராஜூ முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், விவசாயிகளின் நலனுக்கான உழவன் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார்.
விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் மூலம் இயற்கை விவசாயம், பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல சமூகப் பணிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.
மேலும், ஆண்டுதோறும் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து அவர்களுக்கு விருது கொடுத்து கவுரவித்து வரும் கார்த்தி, இந்தாண்டு நடைபெற்ற விழாவில் விவசாயம் குறித்து எமோஷனலாக பேசியுள்ளார்.

உழவன் பவுண்டேசன்
கோலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கி வரும் கார்த்தி, உழவன் பவுண்டேசன் என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் இயற்கை விவசாயிகளை ஒன்று திரட்டுவது, விவசாயம் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, போன்ற பணிகளை செய்து வருகிறார். மேலும், ஆண்டுதோறும் சிறந்த விவசாயிகளை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு உழவர் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கி வருகிறார்.

பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்
அதன்படி, இந்தாண்டுக்கான உழவன் விருது விழா சென்னையில் நடைபெற்றது. அதில், கார்த்தியின் தந்தையும் நடிகருமான சிவகுமார், நடிகர்கள் பொன்வண்ணன், ராஜ்கிரண், இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அவர்கள் முன்னிலையில் 4 விவசாயிகளுக்கு உழவன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து விவசாயம் குறித்து நடிகர் கார்த்தி எமோஷனலாக பேசினார்.

விவசாயிகள் தான் ஹீரோக்கள்
மக்கள் அனைவரும் விவசாயம் குறித்து சிந்திக்க வேண்டும், விவசாயிகளை பற்றியும் அவர்களது வாழ்வாதாரம் குறித்தும் யோசிக்க வேண்டும். அதனால் தான் அவர்களை இங்கே வரவழைத்து மரியாதை செய்து அடையாளப்படுத்துகிறோம். விவசாயிகள் தான் இந்த சமூகத்தின் உண்மையான ஹீரோக்கள் என்பதை மக்களுக்கு காட்டவே இந்த விழா. ஆனால், மக்களிடத்தில் விவசாயிகள் மீதான மரியாதையும் அறிவும் குறைவாகவே உள்ளது எனக் கூறினார்.

விவசாய சுற்றுலா கட்டாயம்
தொடர்ந்து பேசிய கார்த்தி, ஜீன்ஸ், வாட்ச் போன்றவற்றை விலை கேட்காமல் வாங்கும் நாம், கீரை கட்டுக்கு பேரம் பேசுகிறோம். இதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். நமது குழந்தைகளுக்கு சாப்பாடு எங்கிருந்து வருகிறது என சொல்லிக் கொடுப்பதோடு, அதனை வீண் செய்யக்கூடாது எனவும் கற்பிக்க வேண்டும். சில பள்ளிகளில் மட்டுமே விவசாயம் பற்றி தனியாக வகுப்பெடுக்கிறார்கள். ஆனால், அனைத்து பள்ளிகளிலும் விவசாய சுற்றுலாவை கட்டாயமாக்க வேண்டும் என பேசினார்.

யாராக இருந்தாலும் விவசாயி தான்
அதேபோல், தற்போது உணவு உற்பத்தி 2 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைந்துகொண்டே வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தும் நமக்கு தொடர்ந்து உணவு கிடைக்க ஒரே காரணம், விவசாயத்தை விடவே மாட்டேன் என அதனுடன் போராடி வரும் விவசாயிகள் தான். ஆனால், இதனை கடைபிடிக்க அடுத்த தலைமுறை தயாராக உள்ளதா என்பது தான் கேள்வி. அதுதான் இங்கே பயமாக இருக்கிறது. டாக்டர், என்ஜினியர், கலெக்டர் என யாராக வேண்டுமானாலும் இருங்கள், ஆனால் விவசாயியாகவும் இருக்க வேண்டியது தான் தற்போதைய தேவை என எமோஷனலாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











