வரும்.. ஆனா.. வராது.. நரகாசூரன் ரிலீசுக்காக கிறிஸ்டோபர் நோலனின் உதவியை நாடிய கார்த்திக் நரேன்?
சென்னை: OTT தளத்தில் ஆவது நரகாசூரன் ரிலீஸ் ஆகுமா என்ற ரசிகர்களின் கேள்விக்கு இப்படியொரு பதிலை கார்த்திக் நரேன் கொடுத்துள்ளார்.
துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி ரிலீசாக முடியாமல் கிடப்பில் கிடக்கும் படம் தான் நரகாசூரன்.
இந்த படத்தில் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, ஆத்மிகா, சந்திப் கிஷன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நம்பிக்கை
முதல் படத்திலேயே பெயர் வாங்கிய கார்த்திக் நரேனை அழைத்து பாராட்டித் தள்ளிய இயக்குநர் கெளதம் மேனன், நாம சேர்ந்து படம் பண்ணுவோம், நிச்சயம் இது ஒர்க்கவுட் ஆகும் என அழைக்க, மிகுந்த நம்பிக்கையுடன் நரகாசூரன் படத்தை இயக்கிக் கொடுத்தார் கார்த்திக் நரேன்.

கிடப்பில்
ஆனால், கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணத்தால் அந்த படத்தின் ரிலீஸ் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உதவியுடன் மீண்டு வந்த கெளதம் மேனன் தொடர்ந்து பல படங்களில் நடித்தும், இயக்கியும் வருகிறார். நரகாசூரன் படத்தை மட்டும் அவர் கண்டு கொள்ளாதது கார்த்திக் நரேனுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது.

ஆன்லைனிலாவது
இந்நிலையில், சமீபத்தில் கார்த்திக் நரேனிடம் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட படங்கள் ஆன்லைனில் ரிலீஸ் ஆகின்றன. அப்படியாவது, நம்ம படம் ரிலீஸ் ஆகுமா பாஸ்? என ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, அந்த ரசிகரே அசந்து போகும் அளவுக்கு ஒரு பதிலை இயக்குநர் கூறியுள்ளார்.

கிறிஸ்டோபர் நோலன்
கிறிஸ்டோபர் நோலனின் டெனெட் படத்தின் மிரள வைக்கும் இரண்டாவது டீசர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் டிரெண்டானது. அந்த படத்தில் ராபர்ட் பேட்டின்ஸன் பேசும், ஒரு வசனத்தை பதிவிட்டு, ‘நரகாசூரன் நிச்சயம் வரும் ஆனால்?" என்ற கேள்வியுடன் பதில் கூறியுள்ளார் கார்த்திக் நரேன்.

ரசிகர்கள் குழப்பம்
நரகாசூரன் ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற கேள்விக்கு கிறிஸ்டோபர் நோலன் வரை சென்ற கார்த்திக் நரேன் தெளிவாக எந்த விளக்கத்தையும் சொல்ல வில்லை. OTT தளத்தில் ரிலீசாகாது, லாக்டவுனுக்கு பிறகு தியேட்டரில் ரிலீசாகும் என்பதை தான் கார்த்திக் நரேன் சொல்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். சிலர் டெனெட் டீசர் போல இவர் பதிலும் புரியலையேப்பா என புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











