''துருவங்கள் பதினாறு' இயக்குநரின் அடுத்த படம் எப்போ ரிலீஸ்..?
சென்னை : ரஹ்மான் நடிப்பில் 'துருவங்கள் பதினாறு' படத்தை இயக்கியவர் இளம் இயக்குநர் கார்த்திக் நரேன். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது அந்தப் படம்.
இதையடுத்து, அர்விந்த்சாமி, ஸ்ரேயா, 'மாநகரம்' சுந்தீப், மலையாள நடிகர் இந்திரஜித் ஆகியோர் நடிக்கும் 'நரகாசுரன்' படத்தை இயக்குகிறார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

'துருவங்கள் பதினாறு' படத்தைப் போல இதுவும் க்ரைம் த்ரில்லர் கதைகொண்ட படமாம். இப்படம் குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் கூறுகையில், " 'நரகாசுரன்' படம் நான் இயக்க விரும்பும் ட்ரைலஜி என சொல்லப்படும் மூன்று பட வரிசையில் இரண்டாவது படம்.
'துருவங்கள் பதினாறு' படத்தின் அதே களம் தான் 'நரகாசுரன்' படமும். இரண்டும் கர்மா, நம்பிக்கை உள்ளிட்ட கருத்துகளின் அடிப்படையில் இருக்கும். 'துருவங்கள் 16' பட வெற்றி ரசிகர்கள் எவ்வளவு முதிர்ச்சியடைந்துவிட்டார்கள் என்பதை நிரூபித்தது. அதனால், 'நரகாசுரன்' படத்தின் திரைக்கதை இன்னும் சவாலாக, சிக்கலாக இருக்கும்."
'நரகாசுரன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று முன்தினம் துவங்கியது. நரகாசுரனை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
'துருவங்கள் பதினாறு' போல இப்படத்தையும் பாடல்கள் எதுவும் இன்றி உருவாக்க முடிவு செய்துள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் படத்தில் சமந்தாவின் காதலர் நாக சைதன்யா நடிப்பதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வேடத்தில் இப்போது 'மாநகரம்' சுந்தீப் நடிக்கவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











