தயாரிப்பாளர்களை ஏமாற்றிய தியேட்டர் உரிமையாளர்.. இவ்வளவு பெரிய மோச்டியா?.. ஷாக்கில் திரையுலகம்!
சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு திரையரங்கில் நடந்த முறைகேடு, திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ஒரு வெற்றிப் படத்தின் விநியோகஸ்தர், BookMyShow தளத்தின் விற்பனை விவரங்களை திரையரங்கு அளித்த கணக்குடன் ஒப்பிட்டபோது, இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
BookMyShow அறிக்கையின்படி, அந்தப் படத்தின் 23,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன. ஆனால், திரையரங்கு விநியோகஸ்தரிடம் 15,000 டிக்கெட்டுகள் மட்டுமே விற்றதாக கணக்கு காட்டியுள்ளது. இதன் மூலம், 8,000 டிக்கெட்டுகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை ₹150 எனக் கொண்டால், இந்த ஒரே திரையரங்கில், ஒரே படத்தின் மூலம் ₹12 லட்சம் மோசடி நடந்துள்ளது.

இந்த மோசடி வெளிவந்த பிறகு, சமீபத்தில் படங்களை வெளியிட்ட மற்ற தயாரிப்பாளர்களும் தங்கள் படங்களின் BookMyShow விற்பனை அறிக்கையை சரிபார்த்துள்ளனர். அப்போது, பல திரைப்படங்களிலும் 5,000 முதல் 20,000 டிக்கெட்டுகள் வரை அந்தந்த திரையரங்குகளில் திருடப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஒரே காஞ்சிபுரம் திரையரங்கில் இந்த அளவு மோசடி நடந்திருந்தால், தமிழகம் முழுவதும் எவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் பல கோடிகள் மோசடி நடந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இத்தகைய பெரிய மோசடிகள் நடந்துகொண்டிருக்கும் வேளையில், தயாரிப்பாளர்கள் சங்கம் ப்ளூ சட்டை மாறனையும், பிரஷாந்த்தையும் முடக்குவது குறித்து ஆலோசிப்பது வியப்பளிக்கிறது. இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால், வருடா வருடம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு தொடரும்.
இந்த முறைகேடு விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமல்லாமல், அரசின் வரி வருவாய்க்கும் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தமிழக அரசும், தயாரிப்பாளர்கள் சங்கமும் உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
BookMyShow, TicketNew போன்ற டிக்கெட் விற்பனை செயலிகளில் உள்ள அதிகாரப்பூர்வ விற்பனை தரவுகள் விநியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வெளிப்படையாகக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த நடவடிக்கை தாமதமானால், தமிழக அரசு, தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவரின் பணமும் தொடர்ந்து சுரண்டப்படும்.
அரசு இதில் தலையிட்டு சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் பல தயாரிப்பாளர்களுக்கு நன்மை ஏற்படும். திரைப்படத் துறையில் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும், அரசின் வரி வருவாயும் பெருகும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இந்த விவகாரத்தில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
டிஜிட்டல் இன்ஃப்ளூயன்சர் கார்த்திக் ரவிவர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இதை தடுப்பதற்கும் வழி உள்ளது என புதிய ட்வீட் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
"Ticket Lootingயை தவிர்க்க எளிமையான தீர்வு உள்ளது...
தயாரிப்பாளர் சங்கமோ, திரையரங்க உரிமையாளர்கள் சங்கமோ Centralized Ticket System கோடிகளில் செலவு செய்து உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளின் டிக்கெட் வழங்கும் கணினிகள் அனைத்தும் BookMyShow / TicketNew நிறுவனங்களுக்கே சொந்தமானவை. அவை அவர்களின் server-இல் இணைக்கப்பட்டுள்ளன. Online & Offline டிக்கெட் விற்பனைகள் அனைத்தும் அந்த server-இல் பதிவாகின்றன. அதை தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் பயன்படுத்திக் கொண்டாலே போதும்.
தயாரிப்பாளர் சங்கம் BookMyShow / TicketNew நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, அவர்கள் படம் திரையிடும் திரையரங்குகளின் தினசரி வசூல் விவரங்களை விநியோகஸ்தர்களுக்கு, தினமும் இரவு காட்சி முடிந்தவுடன் Automatic E-mail அனுப்பும் வகையில் ஏற்பாடு செய்தால் இந்த சிக்கல் தீரும்...
இதை மட்டும் செய்தாலே போதும் டிக்கெட் திருட்டைத் தடுக்க முடியும்...." என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











