கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோ ராகவா லாரன்ஸ்?
சென்னை: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கார்த்திக் சுப்புராஜ் தற்போது இறைவி படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறார். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. விஜய், அஜீத் இருவரில் யாராவது ஒருவரே கார்த்திக் சுப்புராஜின் அடுத்த ஹீரோவாக நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அஜீத், விஜய் இருவரையும் கார்த்திக் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். மேலும் அஜீத்திற்கு இவர் கதை சொன்னதாகவும் கூறினர்.
ஆனால் இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை.தற்போது அஜீத்திற்கு சொன்ன கதையில் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்த பின்னர் படத்தைப் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விதமாக இந்தப் படத்தை நடிகர் விஜய் தயாரிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











