மகான் படத்தில் வாணி போஜன் சீன்களை நீக்கியது ஏன்...கார்த்திக் சுப்புராஜே சொன்ன விளக்கம்
சென்னை : மகான் படத்தில் இருந்து வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதால் ரசிகர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் வாணி போஜனின் காட்சிகள் நீக்கப்பட்டது ஏன் என்பதை டைரக்டர் கார்த்திக் சுப்பராஜே விளக்கமாக தெரிவித்துள்ளார்.
Recommended Video
டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்துள்ள படம் மகான். இந்த படம் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டது. ஆக்ஷன் த்ரில்லர் படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி, விஜய் உள்ளிட்ட பிரபலங்களும் இந்த படத்தை பார்த்து விட்டு பாராட்டி வருகின்றனர்.

படத்தில் வாணி போஜன் எங்கே
மகான் படத்தில் சிம்ரன், வாணி போஜன், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. சிம்ரன், வாணி போஜன் இருவரும் விக்ரமிற்கு ஜோடியாக நடிப்பதாக கூறினார்கள். முதல் படத்திலேயே விக்ரமிற்கு ஜோடியாக வாணி போஜன் நடிப்பதாக கூறப்பட்டதால் ரசிகர்கள் அவரின் நடிப்பை பெரிய திரையில் காண ஆவலாக இருந்தனர்.

வாணி போஜனிற்காக காத்திருந்த ரசிகர்கள்
ஆனால் படத்தில் சிம்ரன் தான் விக்ரமின் மனைவியாக நடித்திருந்தார். அவரும் ஃபஸ்ட் ஆஃபில் சில காட்சிகளிலும், செகண்ட் ஆஃபில் சில காட்சிகளிலும் மட்டுமே வந்து போனார். சரி செகண்ட் ஆஃபிலாவது வாணி போஜன் வருவாரா என ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையில், படத்தில் கடைசி வரை அவர் வரவேயில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதற்காக தான் நீக்கினார்களா
வாணி போஜனை எங்கே காணவில்லை என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். ஆனால் மகான் படம் இரண்டு மணி நேரம் 42 ஓடுகிறது. இதனால் படத்தின் நீளம் கருதி வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதைக் கேட்ட ரசிகர்கள் ஒரு சில சீன்களிலாவது அவர் வருவது போல் காட்டியிருக்கலாம் என தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

கார்த்திக் சுப்பராஜ் சொன்ன விளக்கம்
இந்நிலையில் வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு என்ன காரணம் என டைரக்டர் கார்த்திக் சுப்பராஜே விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், கதைப்படி சிம்ரனை பிரிந்த பிறகு விக்ரம் சில காலம் வாணி போஜனுடன் தொடர்பில் இருப்பதாக தான் கதை அமைக்கப்பட்டது. விக்ரம் - வாணி போஜன் தொடர்பான பெரும்பாலான சீன்கள் எடுக்கப்பட்டு விட்டது. ஆனால் வாணி போஜன் தொடர்பான மொத்த காட்சிகளையும் எடுத்து முடிப்பதற்கு கூட்டம் தேவையாக இருந்தது. ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாம் அலை குறுக்கிட்டதால், கொரோனா கட்டுப்பாடுகளால் வாணி போஜன் நடித்த காட்சிகளை எடுத்து முடிக்க முடியாமல் போனது. இதனால் வேறு வழியில்லாமல் தான் படத்தில் இருந்து வாணி போஜன் நடித்த மொத்த காட்சிகளையும் நீக்க வேண்டியதாகி விட்டது என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











