ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்.. மறக்க முடியாத "பராசக்தி"!
சென்னை: ஓடினாள்.... ஓடினாள்.... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற கருணாநிதியின் பராசக்தி வசனம் மிகவும் புகழ்பெற்ற வசனமாகும்.
கருணாநிதிக்கு இன்று 94-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. மேலும் சட்டசபைக்கு வந்து 60 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் விதமாக வைரவிழாவு்ம கொண்டாடப்படுகிறது. தமிழக முதல்வராக 5 முறை அரியணையில் அமர்ந்தவர் என்ற பெருமைக்கு உரிய கருணாநிதியின் மற்றொரு முகம் திரையுலகத்துடன் வாழ்ந்ததாகும்.
தமிழ் திரையுலகில் 15 நிமிடத்துக்கு ஒருமுறை பாடல் வந்த காலங்களில் கருணாநிதியின் அடுக்கு மொழி வசனங்கள் அவருக்கு மட்டுமல்லாமல் அதில் நடித்த நடிகர்களுக்கும் பெயரை வாங்கிக் கொடுத்துள்ளது. அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பராசக்தி. நடிகர் சிவாஜி கணேசனின் முதல் படம்.

முதல் படத்திலேயே...
முதல் படமான பராசக்தியில் நடிப்பிலும் வசன உச்சரிப்பிலும் சிவாஜி கணேசன் பின்னி பெடல் எடுத்திருப்பார். இந்த படம் மூலம் சிவாஜிக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தன. 1952-இல் வெளியான இப்படத்தில் பணத்தையெல்லாம் இழந்த சிவாஜி கணேசன் சாலையோரமாய் படுத்துத் தூங்கும்போது ஒரு போலீஸ்காரர் தட்டி எழுப்புவார். "டேய்.. நீ பிக்பாக்கெட்டா?" "இல்லை.. எம்ப்ட்டி பாக்கெட்" "ஏண்டா.. முழிக்கிறே?"--- "தூங்குறவனை எழுப்பினால் முழிக்காம என்ன பண்ணுவான்?" என்பார். இதற்கு தியேட்டரில் ஒலித்த கரகோஷம் விண்ணையே பிளந்தது.

ஓடினாள்.... ஓடினாள்
இந்த படத்தில் நகைச்சுவையையும், துன்பத்தையும் மிகவும் இயல்பாக கூறியிருப்பர். அதிலும் புகழ்பெற்ற வசனம் என்றால் ஓடினாள், ஓடினாள், வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள் என்ற வசனம் இன்றளவிலும் மக்கள் மனதில் மறக்க முடியாதவை. கோவில் குறித்த வசனங்களில் பகுத்தறிவை கருணாநிதி புகுத்தியிருப்பார்.

கோயில் கூடாது என்பதல்ல
கதாபாத்திரங்களுக்கு பெயர் வைப்பதிலிருந்து வசனங்கள் வரை அனைத்திலும் தனது உணர்வுகளை கருணாநிதி வெளிப்படுத்தியிருப்பார். "கோவில் கூடாது என்பதல்ல. அது கொடியவர்களின் கூடாராமாகிவிடக்கூடாது" என்ற வசனமும், "அடேய் பூசாரி.. அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?" என்ற கேள்வியும் இந்த திரைப்படம் வந்து 65 ஆண்டுகள் கடந்த பிறகும் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது.

பொறுத்தது போதும்
மனோகரா திரைப்படத்தில் பொறுத்தது போதும் பொங்கி எழு என்று தாய் கண்ணாம்பாவும், என் தாயைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்கிற மகன் சிவாஜியும் கலைஞரின் வசனத்தை போட்டிக் கொண்டு பேசியிருப்பர். இந்த வசனத்தை கேட்கும் ரசிகர்களுக்கு தனி வீரம் வரும் அளவுக்கு அதில் உயிரோட்டம் இருக்கும்.

பூம்புகார் வசனங்கள்
கலைஞரின் மற்றொரு பேசப்பட்ட படம் பூம்புகார் ஆகும்.அதாவது உண்மையான இலக்கிய சம்பவத்தை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக இதில் வசனங்கள் இடம் பெற்றிருக்கும். இப்படத்தில் கோவலனாக எஸ்.எஸ்.ராஜேந்திரனும், கண்ணகியாக விஜயகுமாரியும் நடித்திருப்பர்.

யார் கள்வன்?
யார் கள்வன்? என் கணவன் கள்வனா? அவரைக் கள்வனென்று சொன்ன இந்த அவையோரே கள்வர்!
நல்லான் வகுத்ததா நீதி? இந்த வல்லான் வகுத்ததே நீதி! இது கோப்பேருந்தேவியின் சிலம்பு இல்லை இது கோவலன்தேவியின் சிலம்பு! நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியனே உனக்கு செங்கோல் எதற்கு மணிமுடி எதற்கு வெண்கொற்றக் குடை எதற்கு?
என்று வசனம் இடம்பெற்றிருக்கும். இதில் நடித்த கலைஞர்களும், அவர்களது வசன உச்சரிப்பும் மிகவும் பிரமாதமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications











