திரிஷாவாக ரெஜினா கெஸன்ட்ரா... வெளியானது கசடதபற டீசர் மற்றும் ரிலீஸ் தேதி!
சென்னை : மிக வித்தியாசமாக யோசிக்க கூடிய இயக்குனர் சிம்புதேவன் இப்பொழுது 6 வித்தியாசமான கதைக்களத்தை ஒன்றாக இணைத்து கசடதபற என்ற படத்தை இயக்கியுள்ளார்.
ஹரிஷ் கல்யாண்,சந்தீப் கிஷான் விஜயலட்சுமி,வெங்கட்பிரபு ,பிரேம்ஜி அமரன், பிரியா பவானி சங்கர், ரெஜினா கெஸன்ட்ரா என பலர் இதில் நடித்துள்ளனர்.
நேரடியாக ஓடிடியில் வெளியாகும் இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களின் சுவாரசியமான பெயர்களுடன் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி அப்டேட்யையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

ஃபேண்டசி கதைகளை
கற்பனைகளில் வரக்கூடிய ஃபேண்டசி கதைகளை படங்களாக இயக்கி அதில்
வெற்றியும் பெற்று வருபவர் இயக்குனர் சிம்புதேவன். அந்த வகையில் இவர் இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி,அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி என அனைத்து திரைப்படங்களும் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளன. முதல் முதலாக இயக்கிய இம்சை அரசன் 23ம் புலிகேசி வரலாறு காணாத வெற்றியை இவருக்குப் பெற்றுத் தந்தது. அதுவரை கதாநாயகர்களுடன் இணைந்து காமெடியில் கலக்கி வந்த நடிகர் வடிவேலு இம்சை அரசன் 23ம் புலிகேசி மூலம் முழு ஹீரோவாக மாறி நகைச்சுவையில் அனைவரையும் நனைய வைத்திருப்பார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கின்ற மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படமாக வெளிவந்த இம்சை அரசன் 23ம் புலிகேசியில் வடிவேலு இரட்டை வேடங்களில் நடித்து கலக்கி இருப்பார். முதல் படத்திலேயே சக்ஸஸ்புள் இயக்குனர் என்ற பெயரை பெற்றார் இயக்குனர் சிம்புதேவன் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். நடிகர் வடிவேலுவை தொடர்ந்து அப்பொழுது முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த சந்தானம் நடிப்பில் அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தை இயக்கி அனைவரையும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தார்.

கௌபாய் கதையில்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற குழப்பம் இன்று வரை பலருக்கும் இருக்க அதற்கு மிகச் சிறந்த புரிதலுடன் வெளியான அறை எண் 305ல் கடவுள் சிம்புதேவனுக்கு மற்றுமொரு வெற்றியை பெற்றுத் தந்தது. ஜெய்சங்கர் காலத்திற்கு பிறகு கௌபாய் கதைகளே இயக்க தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என நினைத்துக் கொண்டிருக்கையில் கௌபாய் ஸ்டைலில் இரும்புக்கோட்டை முரட்டுசிங்கம் என்ற புதுவிதமான படத்தை கொடுத்து பரவசப் படுத்தி இருந்த சிம்புதேவனுக்கு ஜாக்பாட் அடித்தது போல விஜய்யை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து கமர்ஷியல் மற்றும் காதல் படங்களில் நடித்து வந்த விஜய் முதல் முறையாக பிரம்மாண்டமான ஃபேண்டசி படத்தில் நடிக்க பெரும் எதிர்பார்ப்பில் பெரும் பொருட்செலவில் வெளியான புலி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மாறாக ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மிகப்பெரிய ஏமாற்றமாகவே அமைந்தது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி 2
வழக்கமான விஜய் படங்கள் போல அல்லாமல் சிம்புதேவன் ஸ்டைலில் ஃபேண்டசி யில் உருவான புலியில் நடிகை ஸ்ரீதேவி நடித்து தமிழ் சினிமாவிற்கு கம்பேக் கொடுத்தார். மேலும் நடிகர் சுதீப் இதில் வில்லனாக நடித்து மிரட்டியிருப்பார். புலி தோல்விக்குப் பிறகு படங்களை இயக்காமல் இருந்த சிம்புதேவன் இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் பாகம்-2 இயக்க தயாராகினார். சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்தப்பட்டது அதன்பிறகு வடிவேலுவுக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையே ஏற்பட்ட பூசல் காரணமாக இப்படமும் கிடப்பில் போடப்பட்டது.

கசடதபற
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி படங்களின் வருகை அதிகமாகிக்கொண்டே இருக்க இயக்குனர் சிம்புதேவன் இப்போது வித்தியாசமான 6 கதைகளைக் கொண்டு புதிய ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கி உள்ளார். கசடதபற என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் மொத்தம் 6 கதைகள் என்பதால் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியாக இசையமைப்பாளர்கள், நடிகர்கள், மற்றும் எடிட்டர்கள் பணியாற்றி உள்ளனர். பொதுவாக ஆந்தாலஜி திரைப்படங்கள் என்றால் ஒவ்வொரு கதையும் வேறு வேறு இயக்குனர்கள் இயக்கிய இருப்பார்கள் ஆனால் கசடதபற திரைப்படத்தில் சிம்பு தேவன் ஒருவரே 6 கதைகளையும் இயக்கியுள்ளார் .

ஆகஸ்டு 27 ரிலீஸ்
இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷான், சாந்தனு பாக்யராஜ், பிரேம்ஜி அமரன்,வெங்கட்பிரபு, விஜயலட்சுமி,ரெஜினா கெஸன்ட்ரா, பிரியா பவானி சங்கர், சாந்தினி ஆகியோர் நடித்திருக்க வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் மற்றும் ஆர் ரவீந்திரனின் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி அமரன், சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், சான் ரோல்டன் போன்ற இசையமைப்பாளர்கள் தனித்தனி கதைகளுக்கு இசை அமைத்துள்ளனர்.
இதில் சான் ரோல்டன் இசையில் கங்கை அமரன் வரிகளில் உருவான "நீ போதும் கண்ணா" என தொடங்கும் பாடல் இப்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இதில் வரும் கதாபாத்திரங்களின் அறிமுக டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி த்ரிஷாவாக ரெஜினா கெஸன்ட்ரா, கண்மணியாக பிரியா பவானி சங்கர், பாலா கதாபாத்திரத்தில் பிரேம்ஜி அமரன், ஆர்என்ஏ. கந்தா கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷான், சுந்தரி கதா பாத்திரத்தில் விஜயலட்சுமி, ஐசக் கதாபாத்திரத்தில் சாந்தனு பாக்யராஜ், சம்யுத்தன் கதாபாத்திரத்தில் வெங்கட் பிரபு, க்ரிஷ் என்ற கதாபாத்திரத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கின்றனர். மேலும் கசடதபற ஆகஸ்டு 27-ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீசாகிறது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











