இளவரசியின் கதைதான் "கண்ணம்மா".. இது கற்பனை அல்ல.. நிஜம்.. கஸ்தூரி பரபரப்பு டிவீட்
சென்னை : விஜய் டிவி.,யில் பலராலும் விரும்பிப் பார்க்கப்படும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக 550 க்கும் அதிகமான எபிசோட்களை தாண்டி போய் கொண்டிருக்கிறது.
மனைவியின் கர்ப்பத்தை சந்தேகப்பட்டு அவளை பிரியும் கணவர், குழந்தைக்கு தந்தை யார் என்பதை நிரூபிக்க போராடும் மனைவி. இது தான் பாரதி கண்ணம்மா சீரியலின் கதை. ஆனால் இதே கதை நிஜத்தில் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்துள்ளது.

நிஜ கண்ணம்மா இளவரசியின் கதை
1975 ம் ஆண்டு இளவரசி (19) என்ற பெண் விஜய கோபாலன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணமாகி 7 மாதங்கள் ஆன நிலையில் இளவரசி கருவுற்றிருக்கிறார். இந்நிலையில் ஐதராபாத்திற்கு வேலைக்காக செல்வதாக கூறி சென்ற விஜய கோபாலன் திரும்பி வரவேயில்லை.

இளவரசிக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்
வெகு நாட்களாகியும் கணவனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் வயிற்றில் குழந்தையுடன் கணவனை தேடி அலைந்துள்ளார் இளவரசி. இந்த நிலையில் இளவரசிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. 10 ஆண்டுகளாக கணவனை தொடர்ந்து தேடிக் கொண்டிருந்த இளவரசிக்கு அதிர்ச்சி தரும் தகவலாக, விஜய கோபாலனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி, குழந்தை இருப்பது தெரிய வந்தது.

போலீசில் கணவர் மீது புகார்
1985 ல் தான் விஜயகோபாலன் காவல் துறையில் பணிபுரிவது இளவரசிக்கு தெரிய வந்துள்ளது. தன்னை திருணம் செய்து, குழந்தையுடன் கைவிட்டுச் சென்ற கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து விஜய கோபாலனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

மகள் வளர்ந்து தொடுத்த வழக்கு
விசாரணையில் இளவரசியையும், குழந்தையையும் யாரென்றே தனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார் விஜய கோபாலன். அதன் பிறகு இளவரசியின் புகார் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் இளவரசியின் மகள் வளர்ந்து 35 வயதை எட்டிய நிலையில், 2010 ல் கோட்டில் வழக்கு தொடர்ந்தார்.

36 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி
கோர்ட் உத்தரவின்படி டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டு, இளவரசியின் மகள் விஜயகோபாலனுக்கு பிறந்தவர் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. புகார் அளித்து 36 ஆண்டுகள் கழித்து இளவரசிக்க நீதி கிடைத்துள்ளது. காவல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஜய கோபாலனுக்கு தற்போது 72 வயதாகிறது. இளவரசிக்கு 65 வயது. இவர்களின் மகளுக்கு 42 வயது. அவருக்கு திருணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

கஸ்தூரியின் ட்வீட்
இந்த செய்தியை சுட்டிக்காட்டி நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். அதில், தாமதிக்கப்பட்ட நீதியின் சோகமான கதை. இளவரசி என்ற பெண் வாழ்க்கை முழுவதும் போராடி உள்ளார். கர்ப்பமான, கணவனால் கைவிடப்பட்டவர் போலீசின் உதவியை நாடி உள்ளார். ஆனால் அவரின் கணவரும் போலீஸ் என்பதால் போலீசார் உதவவில்லை. 45 ஆண்டுகளுக்கு பிறகு உண்மை வெளி வந்துள்ளது. ஆனால் அவரின் வாழ்க்கை வீணாகி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











