25 Years Of Rhythm: 25 வருடங்களை நிறைவு செய்த ரிதம்.. தனது பாணியில் சந்தோசத்தை வெளிப்படுத்திய வைரமுத்து!
சென்னை: இயக்குநர் வசந்த் இயக்கத்தில் உருவான படம் ரிதம். இந்த படத்தில் அர்ஜுன், மீனா, ஜோதிகா, நாகேஷ், ரமேஷ் அரவிந்த், மணிவண்ணன் என பலரும் நடித்திருந்தார்கள். படம் கடந்த 2000ஆம் ஆண்டு வெளியானது. தமிழ் சினிமாவில் இந்த படம் ஹேட்டர்ஸே இல்லாத ஃபீல் குட் மூவி லிஸ்ட்டில் என்றைக்கும் இருக்கும் படமாக உள்ளது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும், வசனங்களும் எதார்த்தம் என்றால், படம் முழுக்க நம்மை உருகி உருகி படத்தோடு ஒன்றச் செய்யும் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையும் பாடல்களும் தனிக்காரணம். படத்தை இப்போது பார்த்தாலும் செம பிரஷ்ஷாக இருக்கும். ஒருவேளை இன்றைய 2கே கிட்ஸ்களில் பலருக்கு இந்தப் படம் கொஞ்சம் கிரிஞ்சாகக் கூட இருக்கலாம். ஆனால் அவர்களும் 30களை நெருங்கும்போது, " அட தமிழ்ல இப்படி ஒரு படம் வந்திருக்கே.. இந்தப் படத்தை நாம் இத்தனை நாளா பார்க்காமல் மிஸ் செய்துவிட்டோமே" என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு மிகவும் நேர்த்தியான படம். படத்தை யூடியூப் சேனலில் மட்டும் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து. அவர் படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து, தனது எக்ஸ் பக்கத்தில் படம் குறித்தும் படத்தின் பாடல்கள் குறித்தும், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் குறித்தும் மிகவும் நெகிழ்ச்சியாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களுக்கு மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
அவரது பதிவில், "கால் நூற்றாண்டு
கழிந்தபின்னும்
ரிதம் படப் பாடல்கள்
கொண்டாடப்படுவதைப்
புன்னகையோடு பார்க்கிறேன்
இசை மொழிக்கு
அழகு தருகிறது
மொழியோ இசைக்கு
ஆயுள் தருகிறது
ஐந்து பாடல்களுக்கும்
ஐம்பூதங்களை
உள்ளடக்கமாக்கியவர்
இயக்குநர் வசந்த்;
நல்லிசை நல்கியவர்
ஏ.ஆர்.ரகுமான்
நதியே நதியே பாடலில்
"தண்ணீர்க் குடத்தில்
பிறக்கிறோம்
தண்ணீர்க் கரையில்
முடிக்கிறோம்" என்ற வரிகளைத்
தமிழன்பர்கள் இன்றும்
மந்திரம்போல் ஓதுகிறார்கள்
காற்றே
என் வாசல் வந்தாய் பாடலில்
"பூக்களுக்குள்ளே
தேனுள்ள வரையில்
காதலர் வாழ்க
பூமிக்குமேலே
வானுள்ள வரையில்
காதலும் வாழ்க" என்ற வரிகளை
இன்றைய இருபது வயதுகள்
இதழோடு இதழ்சேர்த்து
உச்சரிக்கின்றன
நல்ல பாடல்கள்
தேன்போல...
கெட்டுப் போவதில்லை
படம் மறந்துபோனாலும்
பாடல்கள் மறப்பதில்லை
காடழிந்து போனாலும்
விதையழிந்து போவதில்லை" என்று பதிவிட்டுள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இவரது இந்த பதிவுக்கு இணைய வாசி ஒருவர், " இந்த படத்தில் இந்தியாவின் கவி சாம்ராட் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் ஒவ்வொரு பாடல்களும் தேனை விட சுவையாக எழுதியிருப்பார்கள். இவ்வளவு கவி ஆற்றல் கொண்ட நீங்கள் சோழர் காலத்தில் பிறந்திருந்தால் தஞ்சை மண்ணையே எழுதி வைத்திருப்பார்கள். கவிப்பேரரசு என்று சும்மாவா சொல்றாங்க" என்றும் மற்றொருவர், " ரிதம் படப் பாடல்கள் கவிப்பேரரசின் வைர வரிகளால் சதம் அடித்த பாடல்கள். சதுப்பு நிலத்திலும், சஹாரா பாலைவனத்திலும், சாலை பயணத்திலும், ஆகாய வழியிலும், ஆறுதலாகவும் ஆனந்தமாகவும் செவியில் நுழைந்து உயிரில் கலந்த வரிகள். காலத்தால் அழிக்க முடியாத வரிகளை வண்ணமயமாக்கிய
இயக்குநருக்கு இதய நன்றிகள்" என்றும் பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











