கேரள மக்களுக்கு உதவி செய்ய திருமணத்தை தள்ளிப் போட்ட நடிகர்
திருவனந்தபுரம்: கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய நடிகர் ராஜீவ் பிள்ளை தனது திருமணத்தை தள்ளிப் போட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள நன்னூரை சேர்ந்தவர் நடிகர் ராஜீவ் பிள்ளை. நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ரிச்சா சட்டாவுடன் சேர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராஜீவ் தனது காதலியான அஜிதாவை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

வெள்ளம்
ராஜீவ், அஜிதா திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. ராஜீவின் சொந்த ஊர் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதை பார்த்த ராஜீவ் இந்த நேரத்தில் மக்களுக்கு உதவி செய்வது தான் முக்கியம் என்று முடிவு செய்து தனது திருமணத்தை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளார்.
ராஜீவ் பிள்ளை
ராஜீவ் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து ரிச்சா சட்டா சமூக வலைதளத்தில் புகைப்படம் வெளியிட்டு கூறியிருப்பதாவது, என் நண்பரும், ஷகீலா படத்தின் சக நடிகருமான ராஜீவ் பிள்ளை 3 நாட்களுக்கு முன்பு நடக்கவிருந்த திருமணத்தை தள்ளிப் போட்டுவிட்டு நன்னூரில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ளவர்களை மீட்டு வருகிறார், பிராவோ என்று தெரிவித்துள்ளார்.

நிஜ ஹீரோ
ஊர் மக்களுக்கு உதவி செய்ய திருமணத்தை தள்ளிப் போட்ட ராஜீவ் பிள்ளை குறித்த தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது. ஹீரோ என்றால் அது ராஜீவ் தான் நெட்டிசன்கள் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். நடிகர் டொவினோ தாமஸும் தனது சொந்த ஊரில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ள நிவாரணம்
ரூ. 19, 500 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ள கேரளாவுக்கு பிற மாநிலங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் உதவி வருகிறார்கள். தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் லட்சக் கணக்கில் நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் விக்ரம் ரூ. 35 லட்சம் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











