தெருவில் சிறுமி பாடிய வீடியோ வைரல் - தேடிப்பிடித்து வாய்ப்பளித்த நடிகர்!
காயங்குளம் : ஜூனியர் சிங்கர் போட்டிகளில் கலந்துகொண்டு அதில் திறமையைக் காட்டி, அதன்பின் பாடுவதற்கு வாய்ப்புப் பெற குழந்தைகளைத் தயார்படுத்தும் போக்கு இப்போது அதிகரித்து வருகிறது.
ஆனால் அதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடியாத, அதேசமயம் திறமையுள்ள குழந்தைகளுக்கு சமூக வலைதளங்கள் சத்தமில்லாமல் தளம் அமைத்துக்கொடுத்து வருகின்றன.
அப்படித்தான் கேரளாவில் காயங்குளம் பகுதியைச் சேர்ந்த சிறுமி சிவகங்காவும் தனது பாடும் திறமையாமல் நடிகர் ஜெயசூர்யா மூலம் சினிமாவில் வாய்ப்புப் பெற்றிருக்கிறார்.

'மானத்த மாரிக்குரும்பே...' :
சில தினங்களுக்கு முன் ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவரோரம் நின்று மைக்கைப் பிடித்தபடி ஒரு சிறுமி 'புலி முருகன்' படத்தில் இடம்பெற்ற 'மானத்த மாரிக்குரும்பே' பாடலை மனம் நெகிழும் வகையில் பாடிய வீடியோ ஒன்று பேஸ்புக்கில் வெளியானது.

இளைஞர்கள் செயல் :
காயங்குளம் பகுதி இளைஞர்கள் சிலர் மைக்செட் வசதி ஏற்படுத்திக்கொடுத்து சிவகங்கா எனும் சிறுமி பாடுவதற்கு உதவி செய்தார்கள். சிவகங்கா பாடிய வீடியோவை ஶ்ரீஜித் எனும் இளைஞர் ஃபேஸ்புக்கில் பதிவேற்றியிருந்தார்.
வைரலான வீடியோ :
இந்தச் சிறுமியின் குரலால் ஈர்க்கப்பட்ட மலையாள நடிகர் ஜெயசூர்யா, அந்தச் சிறுமி பற்றிய விவரங்களை யாராவது கொடுத்து உதவுமாறு அந்த வீடியோவை பகிரவும் செய்தார். அந்த வீடியோவை ஒரு லட்சம் பேருக்கும் மேல் பார்த்திருக்கிறார்கள். அந்த வீடியோ மலையாளிகள் மத்தியில் வைரலானது.

சிறுமியைச் சந்தித்த நடிகர் :
இதன்மூலம் ஜெயசூர்யாவுக்கு சிறுமி பற்றிய தேவையான தகவல்களும் கிடைத்தன. பின்னர் அந்த சிறுமி சிவகங்காவைச் சந்தித்த ஜெயசூர்யா, அந்தச் சிறுமிக்கு, அடுத்ததாக தான் நடிக்கவுள்ள 'காப்ரி' என்கிற படத்தில் ஒரு பாடல் பாடும் வாய்ப்பைத் தந்துள்ளார்.

படத்தில் நடிக்கும் சிவகங்கா :
'காப்ரி' படத்தில் பாடுவதோடு மட்டுமல்லாமல், படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றிலும் சிவகங்காவை நடிக்கவைக்க இருக்கிறாராம். சிறுமிக்குக் கிடைத்த வாய்ப்பால் மலையாளிகள் மகிழ்ச்சியாக இந்தத் தகவலைப் பகிர்ந்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











