கிருமி - சஸ்பென்ஸ் த்ரில்லர்
சென்னை: மதயானைக் கூட்டம் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மற்றும் சார்லி ஆகியோரின் நடிப்பில் இன்று வெளியாகியிருக்கும் திரைப்படம் கிருமி.
இயக்குநர் அனுசரண் இப்படத்தின் கதையை காக்கா முட்டை புகழ் மணிகண்டனுடன் இணைந்து எழுதியிருக்கிறார். கிருமி என்ற தலைப்பு மற்றும் திரையுலகினர் மத்தியில் படத்திற்கு கிடைத்த நல்ல பெயர் போன்ற காரணங்களால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
படம் வெளியாகும் முன்னரே மும்பை சர்வதேசத் திரைப்பட விழா மற்றும் கனடா திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படம் கிருமி என்பது குறிப்பிடத்தக்கது.
கிருமி படத்தின் கதை மற்றும் ரசிகர்களை படம் எந்தளவுக்கு கவர்ந்தது என்பதை கீழே காணலாம்.

கிருமி கதை இதுதான்
போலீஸ் இன்பார்மராக இருக்கும் ஒருவர் மூலம் வெட்டியாக சுற்றிக் கொண்டிருக்கும் நாயகன் கதிருக்கு போலீசின் அறிமுகம் கிடைக்கிறது. அதன்பின்பு போலீசிற்காக மாமூல் வாங்குவது, ரோட்டில் நிறுத்தபட்டிருக்கும் வாகனங்களை வண்டியில் ஏற்றுவது என்று சின்னச்சின்ன வேலைகளை பார்த்துக் கொடுக்கிறார். இந்த வேலைகளை கதிர் கவுரமாகவும், பெருமையாகவும் நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இவருக்கு வேலை வாங்கித் தந்த இன்பார்மர் கொலை செய்யப்படுகிறார். அதன்பின்பு நடக்கும் சம்பவங்களின் ஒட்டுமொத்த தொகுப்பே படம்.

கதிர்
மதயானைக் கூட்டம் படம் பார்த்துத் தான் இந்தப் படத்தில் நடிப்பதற்கு இவரைத் தேர்வு செய்தாரம் இயக்குநர் அனுசரண். இயக்குனரின் தேர்வுக்கு ஏற்ற மாதிரி கொடுத்த வேலையைச் சரியாக செய்திருக்கிறார் கதிர். ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆனபின்பும் வேலை,வெட்டி இல்லாமல் சுற்றுவது, நண்பர்களிடம் கோபம் கொள்வது என்று தனக்குக் கொடுக்கப்பட்ட வேடத்தை மிகவும் இயல்பாக செய்திருக்கிறார் கதிர்.

ரேஷ்மி மேனன்
2 வயது குழந்தைக்கு அம்மாவாக துணிச்சலுடன் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் ரேஷ்மி மேனன். கணவன் வேலை இல்லாமல் இருந்தாலும் கூட அவன் மேல் எரிந்து விழாமல் அன்பாக இருக்கும் வேடத்தில் அழகாக நடித்திருக்கிறார் ரேஷ்மி.

சார்லி
சார்லிக்கு இந்தப் படம் நல்ல ஒரு பிரேக்காக அமைந்திருக்கிறது, படத்தின் காட்சிகளை சார்லி உள்வாங்கி நடித்திருக்கும் விதம் சார்லியின் அனுபவத்தை வெளிக்கொணருகிறது.

ஒளிப்பதிவு மற்றும் இசை
அருள் வின்சென்டின் எதார்த்தமான ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் கே அவர்களின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கின்றது. கண்ணை உறுத்தாத ஒளிப்பதிவில் கவனம் ஈர்த்திருக்கிறார் அருள் வின்சென்டின்.

சொதப்பலான கிளைமாக்ஸ்
அறிமுக இயக்குநர் என்று சொல்லமுடியாத அளவுக்கு படத்தை நன்றாக இயக்கியிருக்கும் அனுசரண் கிளைமாக்ஸ் காட்சியில் சொதப்பி இருக்கிறார்.எதார்த்தம் என்றால் நாயகன் உயிருடன் இருந்திருக்கமுடியாது. திரைப்படநாயகன் என்றால், வில்லன்கள் உயிருடன் இருந்திருக்கக்கூடாது. இரண்டும் இல்லாமல் நாயகன் இயல்பு வாழ்க்கை வாழ்கிறார், அதை அவரால் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்று படத்தை முடித்திருப்பது ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. எனினும் இப்படி ஒரு எதார்த்தம் கலந்த கதையை அளித்ததற்காக இயக்குநர் அனுசரணை நாம பாராட்டலாம்.
கிருமி - எதார்த்தம்


Click it and Unblock the Notifications











