மே 9-ம் தேதி கோச்சடையான்... அப்பாடா... ஒருவழியா உறுதி செய்த சவுந்தர்யா!
சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை சவுந்தர்யா ரஜினி மற்றும் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.
அதன்படி, வரும் மே 9-ம் தேதி உலகம் முழுவதும் 9 மொழிகளில் 6000 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது.
இதன் மூலம், படம் எப்போது வரும் என்ற ரசிகர்களின் காத்திருப்புக்கும் சலிப்புக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

3டி..
கோச்சடையான் படம் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு முதல் முயற்சி... தொழில் நுட்ப ரீதியில் இந்தியர் யாரும் முயற்சித்திராத படம். மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் 3டியில் உருவாகியுள்ள முதல் இந்தியப் படம் இது. இந்தப் படம் குறிப்பிட்ட தியேட்டர்களில் 3டியிலும், பிற தியேட்டர்களில் 2டியிலும் வெளியாகிறது.

ரஜினிக்கு மூன்று வேடங்கள்
ரஜினி இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் தோன்றுகிறார். கோச்சடையான், ராணா, சேனா என்பதுதான் அவரது மூன்று வேடங்கள். மதுரை பாண்டிய மன்னர் பரம்பரைக் கதைதான் இந்தப் படம்.

தீபிகா
ரஜினி ஜோடியாக தீபிகா படுகோன் மற்றும் ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ருக்மினி, நாகேஷ் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் அனிமேஷனில் வருகிறார்கள். ரஜினியின் ருத்ரதாண்டவ காட்சி அனிமேஷனில் இதுவரை இல்லாத புதிய முயற்சி என பாராட்டுப் பெற்றுள்ளது.

தள்ளித் தள்ளிப் போன ரிலீஸ்
படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிப் போய்விட்டது ரசிகர்களுக்கு சலிப்பை உண்டாக்கிவிட்டது. கடைசியாக ஏப்ரல் 11-ல் ரிலீஸ் என்றார்கள். பின்னர் மே 1-ல் ரிலீஸ் என்றார்கள்.

மே 9
இப்போது மே 9-ம் தேதி உலகமெங்கும் படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை சவுந்தர்யா ரஜினி மற்றும் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் தெரிவித்துள்ளனர்.

எத்தனை தியேட்டர்கள்?
இந்தப் படம் உலகமெங்கும் 6000க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இதுவரை 4000 அரங்குகள் இந்தப் படத்துக்கு புக் செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் மட்டும் 1000 அரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டு, தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் 750 அரங்குகள் இதுவரை கோச்சடையானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











