'கோடை மழை' ப்ரியங்காவின் சிரிப்பில் கவிழ்ந்தவர்கள் எத்தனை பேர்!'
கங்காருவில் பாசமிக்க தங்கச்சியாக பவ்யம் காட்டிய ஸ்ரீப்ரியங்கா, அடுத்த படமான 'வந்தா மல'யில் வட சென்னைப் பெண்ணாக வந்து 'வூடு கட்டினார்'.
நல்ல நடிகை என்ற பெயர் கிடைத்தாலும், இன்னும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம். அது கோடை மழை படம் மூலம் தணிந்திருக்கிறது.

பிரபு தேவாவின் உதவியாளர் கதிரவன் இயக்கியிருந்த இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. ஆரம்பத்தில் படம் குறித்து எந்த பரபரப்பும் இல்லை. இப்போது மெல்ல மெல்ல படம் குறித்த 'டாக்' நல்லவிதமாகப் பரவ, சந்தோஷத்தில் இருக்கிறார் ப்ரியங்கா.
கோடை மழை பட அனுபவங்கள் குறித்துக் கேட்டபோது, "ஹைய்யோ... சொல்ல நிறைய இருக்குங்க" என மலர்ந்தார்.
"கோடை மழை கிராமப் பின்னணியில் உருவான படம். எனக்கு நல்ல வேடம். பொதுவாக கிராமத்துப் பெண் வேடம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

இந்தப் படத்தில் இயக்குநர் சொன்னதை நான் செய்தேன். ஷூட்டிங்கில் நிறைய காட்சிகளை வித்தியாசமான கோணத்தில் படமாக்கிக் கொண்டே இருப்பார் கதிரவன். நான், 'இது எதற்கு? அது என்ன?' என்றெல்லாம் கேட்டுக் கொண்டே இருப்பேன். கதிரவனோ, 'நான் சொல்வதை மட்டும் செய்ங்க.. அப்புறம் படத்தில் பாருங்க' என்றார்.
அது எந்த அளவு உண்மை என்பதை படத்தில் பார்த்து வியந்தேன். படம் பார்த்த நிறையப் பேர் எனக்கு தியேட்டரிலிருந்தே போன் செய்து பாராட்டினார்கள்.
இந்தப் படத்தில் வைரமுத்துவின் பாடல் வரிகளுக்கு நான் நடித்தது மறக்க முடியாதது. என் முதல் படம் கங்காருவிலும் அவர்தான் பாடல்கள் எழுதினார். இப்போது மூன்றாவது படத்துக்கும் அவர்தான் எழுதியிருக்கிறார். என்னை மாதிரி வளரும் நடிகைக்கு இதை விட வேறு என்ன வேண்டும்? கோடை மழையைப் பார்த்த கவிஞர் வைரமுத்து, 'சிறப்பாக உணர்ந்து நடித்திருக்கிறாய்' என்று என்னைப் பாராட்டினார். அது என் பாக்கியமாகக் கருதுகிறேன்," என்று அழகாகச் சிரித்தார்.

"ரொம்ப அழகா சிரிக்கிறீங்க? இந்த சிரிப்பில் கவிழ்ந்தவர்கள் எத்தனைப் பேரோ? என்று கேட்டதற்கு, இன்னும் அழகாகச் சிரித்தபடி, " என்னுடைய சிரிப்பை நிறையப் பேர் பாராட்டியது உண்மைதான். ஆனால் கவிழ்ந்தவர்கள் லிஸ்டெல்லாம் என்னிடம் இல்லை," என்றார்.
'கான்ட்ராவர்சி இயக்குநர் எனப்படும் சாமி படத்தில் ஒருமுறை நடித்த நாயகிகள் மீண்டும் அவர் இயக்கத்தில் நடித்ததில்லை. கங்காரு ப்ரியங்காவுக்கு மீண்டும் நடிக்கும் ஐடியா இருக்கா?'
"அவர் அழைத்தால் நிச்சயமாக நடிப்பேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை!"
அடுத்து நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிப் பேசிய ப்ரியங்கா, "கோடை மழை மாதிரி நல்ல கேரக்டர்கள் அமைய வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன். இப்போதைக்கு சாரல், ரீங்காரம் படங்களில் நடித்து வருகிறேன். திருப்பதி லட்டு என்ற படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறேன்," என்றார்.
படங்கள்: சுரேஷ் சுகு


Click it and Unblock the Notifications











