ஜெயலலிதா விடுதலை... தமிழ் திரையுலகம் உற்சாகம்.. கொண்டாட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து எந்த வித சிக்கலுமின்றி அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலையாகியிருப்பதை தமிழ் திரையுலகமே கொண்டாடி வருகிறது.
திமுக ஆட்சியின்போது தன் மீது தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிருந்தும் விடுதலைப் பெற்ற ஜெயலலிதாவுக்கு பெரும் தலைவலியாய் அமைந்தது இந்த சொத்துக்குவிப்பு வழக்கு.

இந்த வழக்கிலிருந்து இன்று முற்றிலுமாக விடுவிக்கப்பட்டுள்ளார் ஜெயலலிதா.
இதனை திரையுலகின் அனைத்து சங்கங்களும் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம், பிலிம்சேம்பர் உள்ளிட்ட அமைப்புகள், ஜெயலலிதாவின் விடுதலைக்காக பிரார்த்தனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் அவர் இந்த சொத்து வழக்கிலிருந்து முழுவதுமாக விடுதலை செய்யப்பட்டிருப்பது திரையுலகினருக்கும் அதிமுவினருக்கும் மிகுந்த நிறைவையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களில், அனைத்து திரைப்பட அமைப்புகளும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்தும் வரவேற்பும் தெரிவித்ததோடு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்வையும் தெரிவித்தன.
அது மட்டுமல்ல, இன்று நடப்பதாக இருந்த வடிவலுவின் எலி பிரஸ் மீட்டைக் கூட தள்ளி வைத்து விட்டு, ஜெயலலிதாவின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றனர்.
விரைவில் 'அம்மா'வைச் சந்தித்து தங்கள் வாழ்த்துகளைக் கூறவும் திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











