ஆஸ்கார் ரேசில் நுழைந்த கூழாங்கல்...குவிழும் பாராட்டுக்கள்
சென்னை : அறிமுக டைரக்டர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் 2021 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான படம் கூழாங்கல். இந்த படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

குடிகார தந்தை மற்றும் மகன் இடையேயான உறவை சொல்லும் கதை தான் கூழாங்கல். கணவரின் குடியால் தனது தந்தை வீட்டிற்கு கோபித்துக் கொண்டு போகும் மனைவி அல்லது தாயை மீண்டும் கூட்டி வருவதற்காக அவர்கள் செய்யும் வேலைகள் தான் படத்தின் கதை. டைரக்டர் வினோத்ராஜின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் இந்த படத்தின் கதையை உருவாக்கி இருந்தார் அவர்.
முதல் படத்திலேயே பெரும் வரவேற்பை பெற்றார் வினோத் ராஜ். இந்த படம் இந்த ஆண்டு நெதர்லாந்தில் நடைபெற்ற 50 வது சர்வதேச ரோட்டர்டம் திரைப்பட விருது வழங்கும் விழாவில் திரையிடப்பட்டு, கெளரவம் மிக்க டைகர் விருதினை பெற்றது. இந்த படத்தில் யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் டைரக்டர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கிய கூழாங்கல் படம் படம் இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்கு இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்திய ஆஸ்கார் தேர்வு குழுவால் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு இந்த படம், ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டுள்ளதாம்.
2022 ம் ஆண்டு மார்ச் 27 ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது. 2021 ம் ஆண்டின் சிறந்த சினிமாக்கள் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்கார் விருது வழங்கப்பட உள்ளது. இதற்காக இந்தியா சார்பில் கூழாங்கல் படம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்திய ஆஸ்கார் தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான சாஜி என்.கருன் கூறுகையில், இந்த ஆண்டு சத்ய ஜிந்ரேவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இந்திய கலாச்சாரங்களை உலகம் அறிய செய்தவர் அவர். அதனால் இந்தியர்கள் எந்த அளவிற்கு பாரம்பரியத்தை போற்றுகிறார்கள், பல்வேறு கலாச்சாரங்கள் ஆகியவற்றை குறிக்கும் படங்களை தேர்வு செய்ய நினைத்தோம் என்றார்.
இந்த ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்க 14 படங்கள் தேர்வு போட்டியிடப்பட்டன. வித்யா பாலன் நடித்த Sherni, Sardar Udham Singh ன் பயோபிக், கேப்டர் விக்ரம் பயோபிக், தமிழில் மண்டேலா, இந்தி, மராத்தி, அசாமி, குஜராத், மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்கள் ஆஸ்கார் பரிந்துரை குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த 14 படங்களை தாண்டி கூழாங்கல் படம் ஆஸ்கார் விருதிற்காக சென்றுள்ளது.
கூழாங்கல் படம் ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. இந்நிலையில் சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டு, அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து ட்விட்டரில் ஏராளமான ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் அவரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த முறை சூர்யா நடித்த சூரரைப் போற்று ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைத்து அனுப்பப்பட்ட நிலையில் இந்த முறை கூழாங்கல் படமும் ஆஸ்காருக்கு சென்றுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











