தீராத சோகம்.. நடிகர் இறந்த ஒரே மாதத்தில் மனைவியும் மரணம்.. கோட்டா சீனிவாச ராவ் வீட்டில் அடுத்தடுத்து இழப்பு
ஹைதராபாத்: சாமி படத்தில் நடித்து தமிழ்நாட்டில் வெகு பிரபலமடைந்தவர் கோட்டா சீனிவாச ராவ். அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்துவந்த அவருக்கு கடந்த சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. சூழல் இப்படி இருக்க கடந்த மாதம் அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில்; அவரது மனைவியும் இப்போது உயிரிழந்திருக்கிறார்.
கோட்டா சீனிவாச ராவ் அடிப்படையில் ஒரு வங்கி பணியாளராக இருந்தார். அவரை மருத்துவராக்க வேண்டும் என்பதுதான் அவரின் தந்தையுடைய ஆசை. இருப்பினும் பேங்க் வேலை கிடைத்ததால் நிம்மதியும் கிடைத்தது. ஆனால் கோட்டாவுக்கு சிறு வயதிலிருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. எனவே தான் பார்த்துக்கொண்டிருந்த வங்கி வேலையை தூக்கி எறிந்துவிட்டு சினிமாவில் சேர்வதற்கான தேடல்களை தொடங்கினார்.
கிடைத்த வாய்ப்புகள்: விடாமுயற்சியோடு தேடிக்கொண்டிருந்த அவருக்கு 1978ஆம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து நடித்த அவர்; குறுகிய காலத்திலேயே தெலுங்கு திரையுலகத்தில் அனைவராலும் கவனிக்கப்படும் நடிகராக மாறினார். அதன் காரணமாக நிற்கக்கூட நேரமின்றி நடித்துக்கொண்டிருந்த அவரை; இயக்குநர் ஹரி தான் இயக்கிய சாமி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் செய்துவைத்தார்.

பெருமாள் பிச்சை: அந்தப் படத்தில் அவர் ஏற்றிருந்த பெருமாள் பிச்சை கேரக்டர் இன்றுவரை அனைவராலும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு சீனிலும் அதகளம் செய்த அவருக்கு; தமிழிலும் வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி அவர் திருப்பாச்சி, கோ என பல படங்களில் நடித்தார். சூழல் இவ்வாறு இருக்க வயோதிகம் காரணமாக அவருக்கு கோலிவுட், டோலிவுட்டில் வாய்ப்புகள் படிப்படியாக குறைய ஆரம்பித்தன.
மரணமடைந்த கோட்டா சீனிவாச ராவ்: வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து வீட்டில் இருந்த அவருக்கு கடந்த சில காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்த அவர் கடந்த மாதம் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது வீட்டில் இன்னொரு துக்க சம்பவம் நடந்திருக்கிறது.
மனைவியும் இறந்தார்: அதாவது அவர் ருக்மிணி என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன். அவர்களில் மகனான ஆஞ்சநேயா கடந்த 2010ஆம் ஆண்டு உயிரிழந்தார். கோட்டா சீனிவாச ராவ் கடந்த மாதம் உயிரிழந்தார். மகனின் இழப்பே ருக்மிணிக்கு பேரிடியாக இருந்தது. அடுத்ததாக கணவரும் உயிரிழந்தது; ஏற்கனவே உடல்நலம் சரியில்லாமல் இருந்த அவருக்கு மேற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இந்நிலையில் கணவர் இறந்த ஒரே மாதத்தில் ருக்மிணியும் உயிரிழந்துவிட்டார். ஒரே வீட்டில் அடுத்தடுத்து துக்க சம்பவங்கள் நிகழ்ந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











