KPAC லலிதா...காதலுக்கு மரியாதையில் அந்த ஒரே டயலாக்கில் தமிழ் ரசிகர்களை மொத்தமாக கவர்ந்தவர்
கொச்சி : பிரபல மலையாள பழம்பெரும் நடிகை KPAC லலிதா நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 73. கிட்டதட்ட 500 க்கும் அதிகமான படங்களில் நடித்து பிரபலமானவர். அதுவும் குடும்ப பாங்கான, கேரக்டர் ரோல்கள் மட்டுமே நடித்து பிரபலமாகி, தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர்.

மலையாளத்தில் மட்டுமல்ல தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் KPAC லலிதா. தமிழில் விஜய் -ஷாலினி முதல் முறையாக இணைந்து நடித்த மெகாஹிட் படமான காதலுக்கு மரியாதை படத்தில் ஷாலியின் அம்மாவாக நடித்து தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்துள்ளார் லலிதா. மலையாளத்தில் ஃபாசில் இயக்கிய Aniyathipraavu என்ற படத்தை அவரே தமிழில் காதலுக்கு மரியாதை என்ற பெயரில் ரீமேக் செய்தார்.
விஜய்க்கு மிகப் பெரிய பிரேக் கொடுத்த படமாக மட்டுமல்லாமல், காதலை மையமாகக் கொண்ட படங்களுக்கு புதிய இலக்கணம் வகுத்து தந்த படமாகவும் காதலுக்கு மரியாதை அமைந்தது. குழந்தை நட்சத்திரமாக தமிழில் பிரபலமான ஷாலினி, ஹீரோயினாக அறிமுகமான படம். இதில் ஷாலியின் அம்மாவாக, பாரம்பரியம் மிக்க கிறிஸ்தவ குடும்பத்து பெண்ணாக நடித்திருந்தார் லலிதா. மூன்று மகன்கள் மற்றும் ஒரு இளம் பெண்ணுக்கு பாசமான, விதவை தாயாக, தத்ரூபமாக இயல்பான நடிப்பை வெளியிப்படுத்தி இருப்பார்.
படத்தின் பல காட்சிகளில் கோபமான வில்லியை போல் கோபப்படும் லலிதா, மகள் ஷாலினியை பார்த்ததும் பாசத்தில் உருகுவது நடிப்பின் உச்சமாக இருக்கும். அதே போல் படம் முழுக்க காதலுக்கு எதிர்ப்பாக இருந்து வரும் தாயாக வரும் லலிதா க்ளைமாக்ஸில், ஸ்ரீவித்யா, இவ எங்க வீட்டு பொண்ணு. எங்க கிட்டையே கொடுத்துடுங்க என கேட்டதும் அனைவரும் அதிர்ச்சி ரியாக்ஷன் கொடுக்கையில், லலிதா மட்டும் மிக அமைதியாக யாரும் எதிர்பாராத வகையில், கூட்டிட்டு போங்க. யாரு வேணாம்னு சொன்னது. ஆனா அவ விரும்புற, அவளோட ஜீவாவ அவகிட்டையே கொடுத்துடுங்க என்பார்.
லலிதா பேசும் இந்த டயலாக் தமிழ் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விட்டது. இந்த க்ளைமாக்ஸ் காட்சிக்காகவே இந்த படத்தை பார்த்தவர்கள் அதிகம். கதையின் போக்கை பார்த்து அனைவரும் அடுத்து என்ன நடக்க போகிறது என்ற பதற்றத்துடன், வேறு ஒரு க்ளைமாக்ஸை யோசித்துக் கொண்டிருக்கையில், ஸ்ரீவித்யாவிடம் தனது மகளை ஆசிர்வாதம் செய்து விட்டு போங்கள். நீங்கள் போன பிறகு அவர் கதறி அழுவதை பார்க்கும் தைரியம் தனக்கில்லை என தாய்மையின் பாச உணர்வுடன் பேசுவது படத்திற்கே செம ட்விஸ்ட்.
ஒரு மலையாள நடிகை என்பதையும் மறந்து ஷாலினியின் உண்மையான அம்மா என்ற உணர்வுடனேயே படத்தை பார்க்க வைத்தவர் லலிதா. தமிழில் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த KPAC லலிதா இன்று நம்முடன் இல்லை என்பதை தெரிந்து ரசிகர்கள் வேதனையுடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











