KPY Bala: நான் சர்வதேச கைகூலி இல்லை.. தினக்கூலி..விமர்சனங்களுக்கு ஆதாரத்தை தூக்கி வீசிய பாலா!
சென்னை: நடிகர் KPY பாலா சர்வதேச கைக்கூலி என்றும் அவருக்குப் பின்னால் மிகப்பெரிய சர்வதேச வில்லன் இருக்கிறார் என்றும் பத்திரிகையாளர் உமாபதி அளித்த பேட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படி இருக்கையில் பாலா தான் சர்வதேச கைகூலி எல்லாம் இல்லை எனவும், அனைத்தும் தனது சொந்த பணத்தில் செய்து வருவதாகவும்,தெரிவித்து பேட்டி ஒன்று அளித்திருந்தார். இப்படி இருக்கும்போது, நடிகர் KPY பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மீதான விமர்சனங்களுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது முதலில் அவர் தனது வீடியோவில், நான் சர்வதேச கைகூலி எல்லாம் கிடையாது. நான் தினக்கூலி. நான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் போகிறேன். நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறேன், விளம்பரங்களில் நடிக்கிறேன். இன்ஸ்டாகிராமில் புரோமோசன் செய்கிறேன். வெளிநாடு நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன். இதன் மூலம் வரும் வருமானத்தின் மூலம் உதவுகிறேன். எனக்கு வெளிநாட்டில் இருந்து எல்லாம் பணம் வரவில்லை.
நான் சொல்லக்கூடாது ஆனாலும் சொல்கிறேன், எத்தனை குழந்தைகள் படிக்கிறார்கள், எத்தனை பேருக்கு ஆம்புலன்ஸ் மூலம் பலன் கிடைத்துள்ளது. பல கிராமங்களுக்கு தண்ணீர் கிடைத்துள்ளது அது குறித்து எல்லாம் பேச மாட்டார்கள். ( KPY பாலா மூலம் உதவி பெற்ற இளைஞர் தனக்குத்தான் KPY பாலா டூவீலர் வாங்கிக் கொடுத்தார். இதுதான் அந்த வண்டி என்று காட்டுகிறார். அடுத்ததாக எந்த ஆம்புலன்ஸ் பொய்யான ஆம்புலன்ஸ் என்று சொன்னார்களோ அதே, ஆம்புலன்ஸைக் காட்டி, அதில் என்ன பிரச்னை என்பது குறித்து பேசுகிறார் ஒரு இளைஞர்.

ஆம்புலன்ஸ் மூலம் எத்தனை உயிர்கள்: அவர் பேசும்போது. இந்த ஆம்புலன்ஸ் பெயிண்டிங் வேலை செய்யும்போது ஒரு D இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு DD என எழுதிவிட்டார்கள். இதை நாங்கள் மறுநாளே கண்டுபிடித்து மாற்றிவிட்டோம். இந்த ஆம்புலன்ஸ் மூலம் எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது, எத்தனைக் குழந்தைகள் பிறந்துள்ளது என்பது குறித்து யாரும் பேசவில்லை என்று பேசுகிறார்)
பார்த்துக்கலாம்: தொடர்ந்து பேசும் பாலா, நான் கார், பங்களா என்று வாங்கி இருந்தால் இவ்வளவு விமர்சனம் வராது. நான் வீடு கட்ட வாங்கிய இடத்தில் சின்னதாக கிளினிக் தொடங்க ஆசைப்பட்டேன். இப்போதுதான் ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். அது பொறுக்கவில்லையா? இந்த வீடியோ நான் போடக் காரணம், என்னை போல் பலரும் உதவும் எண்ணத்தில் இருக்கிறார்கள், அவர்கள் யாரும் பின் வாங்கக் கூடாது என்பதுதான். பிரச்னை இருக்கிறது என்பதால்தான் உதவுகிறோம், உதவி செய்வதிலும் பிரச்னை வருகிறது என்றால் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பார்த்துக்கலாம், இந்த இரண்டு நாட்களாக நான் மன ரீதியாக படாத பாடு இல்லை. இவர்கள் எல்லாம் அப்படிச் சொல்லுவதால் நான் ஓடமாட்டேன், மக்களுக்காக நான் ஓடிக்கொண்டே இருப்பேன் என்றும் பேசியுள்ளார். இப்போது இவரது இந்த வீடியோவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறர்கள்.


Click it and Unblock the Notifications











