ஷூட்டிங்கில் ரஜினியைக் காப்பாற்றிய கேமரா ஆபரேட்டர்... கண்கலங்கிய கேஎஸ் ரவிக்குமார், ரஜினி
'லிங்கா' படப்பிடிப்பின்போது தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று ரஜினியைக் காப்பாற்றுவதற்காக துணிச்சலுடன் செயல்பட்ட ஜவஹர் என்ற கேமரா ஆபரேட்டரைப் பற்றிக் குறிப்பிட்டு கண் கலங்கினார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.
இதைக் கேட்டு ரஜினியும் கண்கலங்கினார்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'லிங்கா' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ரஜினி பேசும் முன் நன்றி கூறிப் பேச வந்தார் கே.எஸ்.ரவிக்குமார்.

லிங்கா படப்பிடிப்பில் உழைத்த ஒவ்வொருவரின் பெயரையும், அவர்கள் பார்த்த வேலையையும் குறிப்பிட்டு நன்றி கூறினார் ரவிக்குமார். குறிப்பாக, ஜிம்மி ஜிப் கேமராவை இயக்கிய ஜவஹரின் செய்த பிரமிப்பூட்டும் செயலைக் குறிப்பிட்ட போது கண் கலங்கினார்.
அந்த சம்பவத்தை இப்படி நினைவு கூர்ந்தார்..
"ஒருநாள் மழையில் ரஜினி வந்து ரயில் பக்கத்தில் நடந்து வருவது போல ஒரு காட்சியை படமாக்கினேன். அந்த மழைக் காட்சியை ஜிம்மி ஜிப் கேமரா வைத்து எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக செயற்கை மழையை ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால், ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன் கூறிய நேரத்தில், நிஜத்திலேயே நல்ல மழை பெய்தது.
மழையில் ஒயர்கள் எல்லாம் தண்ணீரில் கிடப்பதைக் கவனிக்காமல் ஸ்டார்ட், ஆக்ஷன் என்றவுடன், ஜிம்மி கேமரா வேகமாகப் போய்க் கொண்டிருந்தது. அப்போதுதான் ஷாக் அடித்தது. ஒரே சத்தம். நான் அதை எல்லாம் கவனிக்காமல், "மழை அந்தப் பக்கம், கேமரா இந்த பக்கம், அந்தப் பக்கம்" என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தேன். பாட்டு வேறு ஒருபுறம் ஒடிக் கொண்டிருக்கிறது.
ஷாக் அடித்ததில் ஜிம்மி கேமராவை ஆப்ரேட் செய்த ஜவஹர் தூக்கி வீசப்பட்டார். அப்போது, ரஜினி இருந்த பக்கமாக கிரேன் போய்க்கொண்டிருந்தது. தனக்கு ஷாக் அடித்தாலும் பரவாயில்லை என்று மறுபடியும் எழுந்து ஷாக் அடிக்கும் கிரேனைப் பிடித்து நிப்பாட்டினார் ஜவஹர்.. அப்போதுதான் எங்களுக்கு உயிரே வந்தது," என்று கூறிவிட்டு சில நிமிடங்கள் பேசாமல் கண் கலங்கினார் கே.எஸ்.ரவிக்குமார்.
அதைப் பார்த்து ரஜினியும் கண்கலங்கினார். தனது பேச்சின்போது இதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











