நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட குமரிமுத்து உள்ளிட்டோர் மீண்டும் சேர்ப்பு!
நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட குமரிமுத்து உள்ளிட்டோரை மீண்டும் சேர்ப்பதாக அறிவித்துள்ளார் சங்கத்தின் செயலாளர் ராதாரவி.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமித்து உள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னையில் எந்த இடத்தில் தேர்தலை நடத்தலாம் என்று அவர் ஆய்வு நடத்தி வருகிறார். இதற்கிடையில், நடிகர் சங்க தேர்தலில் ஓட்டுப்போட தகுதியான நடிகர்-நடிகைகள் மற்றும் நாடக நடிகர்கள் பட்டியல் சங்க பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் 31-3-2015 வரை ஒட்டுப்போட தகுதி உள்ளவர்களாக 3148 பேர் இடம் பெற்றுள்ளனர். நடிகர் சங்கத்திலிருந்து நகைச்சுவை நடிகர் குமரிமுத்து ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார். சங்க நிர்வாகிகள் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் நீதிவழக்கு தொடர்ந்து நீக்கத்துக்கு இடைக்கால தடை உத்தரவு பெற்றார்.
இதேபோல, பூச்சி முருகன், ஆர்.எம்.சுந்தரம், பி.ஏ.காஜாமொய்தீன் ஆகியோரும் உறுப்பினர் படிவத்தை புதுப்பிக்கவில்லை என்று சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள்.
அவர்களும் தாங்கள் நீக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார்கள். இதைத்தொடர்ந்து இந்த நான்கு பேரும் மீண்டும் நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனை சங்கத்தின் பொதுச் செயலாளர் ராதாரவி சங்கப் பதிவாளருக்கும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











