புதுவை இந்தியத் திரைப்பட விழாவுக்கு குற்றம் கடிதல் தேர்வு!
புதுவையில் நாளை மறுதினம் தொடங்கும் இந்தியத் திரைப்பட விழாவுக்கு குற்றம் கடிதல் படம் தேர்வாகியுள்ளது.
புதுச்சேரி அரசு செய்தி, விளம்பரத் துறை, நவதர்சன் பிலிம் சொசைட்டி, அலையன்ஸ் பிரான்சிஸ் சார்பில், இந்தியத் திரைப்பட விழா (Indian Panorama) வரும் 16-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை புதுவை ருக்மணி திரையரங்கில் நடைபெறுகிறது.

இதையொட்டி, சிறந்தப் படமாக 'குற்றம் கடிதல்' தேர்வு செய்யப்பட்டுள்ளது.
2015-ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக குற்றம் கடிதல் எனும் படத்தை புதுச்சேரி அரசு தேர்வு செய்துள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்களிடம் அன்போடு பழக வேண்டும் என்ற கருத்தை முன்னிறுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு வரும் 16-ஆம் தேதி நடைபெறும் திரைப்பட விழாவில் முதல்வர் ரங்கசாமி விருது வழங்க உள்ளார்.
சிறந்த படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது, ரூ. ஒரு லட்சம் ரொக்கம், வெள்ளிப் பதக்கம் உள்ளிட்டவற்றை படத்தின் இயக்குநர் பிரம்மா பெற்றுக் கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் தேர்வு செய்யப்படும் சிறந்த படங்கள் திரைப்பட விழாவில் திரையிடப்படும்.
இதன்படி, 16-ஆம் தேதி குற்றம் கடிதல் (தமிழ்),
17-ஆம் தேதி போதான் (பெங்காலி),
18-ஆம் தேதி முன்னறிவிப்பு (மலையாளம்),
19-ஆம் தேதி 1 டிசம்பர் (கன்னடம்),
20-ஆம் தேதி அங்கோன் தேகி (இந்தி) உள்ளிட்ட படங்கள் திரையிடப்படுகின்றன.


Click it and Unblock the Notifications











