சுவாதி கொலைக்கு திரைப்படங்களும் முக்கியக் காரணம் - லட்சுமி ராமகிருஷ்ணன்
சென்னை: நுங்கம்பாக்கம் சுவாதி கொலைக்கு சினிமாவும் ஒரு காரணம் தான் என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.
3 நாட்களுக்கு முன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால் கொலையாளியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எனினும் அருகே இருந்த வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து ரயில்வே போலீசார் கொலையாளியின் உருவப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
மேலும் கொலையாளி வேகமாக நடந்து செல்வது போன்ற வீடியோ ஒன்றையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந்தக் கொலைக்கு பொதுமக்கள் பலரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அதில் பலரும் சினிமாவும் இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பதாக கண்டனங்களை எழுப்பியுள்ளனர். சினிமாவில் கதாநாயகி தன்னைக் காதலிக்கவில்லை என்றால் கதாநாயகன் வன்முறைச் செயல்களில் ஈடுபடுகிறான்.
இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும் இளைஞர்கள் மனதில் அது ஆழப்பதிந்து விடுகிறது. இதனால் தாங்கள் காதலிக்கும் பெண்கள் தங்கள் காதலை ஏற்க மறுத்தால் சினிமா பாணியில் அப்பெண்ணுக்கு எதிரான வன்முறைச் செயல்களில் இறங்கி விடுகின்றனர்.
நாயகர்கள் பாடி ஆடும் பாடல்களும் கூட பெண்களைத் திட்டுவது போன்றே அமைக்கப்படுகிறது. என்று பலரும் சினிமாவைத் தாக்க நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனும் இந்தக் கருத்துக்கு தன்னுடைய ஆதரவைத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் '' சினிமாவில் பெண்களுக்கு எதிரான வன்முறை நியாயப்படுத்தப் படுகிறது. பெண்களை மதிக்க ஆண்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும்.
இனிமேல் மகளைப் போல, மகனுக்கும் மரியாதையை சொல்லித்தர வேண்டும். இதுபோன்ற செயல்கள் நமக்கு நடைபெறும்வரை அதனை வேடிக்கை பாராமல் தண்டனைகளை கடுமையாக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











