மறைந்த நடிகை ஶ்ரீவித்யா வீடு ஏலம்.. வரி பாக்கி வசூலிக்க வருமான வரித்துறை அதிரடி!
சென்னை : ரஜினி, கமல் தொடங்கி விஜய், அஜித் படங்கள் வரை பல பிரபல நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரீவித்யா.
மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து வந்தவர் கடந்த 2006-ல் புற்றுநோயால் காலமானார்.
மரணமடைந்த ஸ்ரீவித்யாவுக்கு வருமான வரி பாக்கி இருப்பதால் அதை வசூல் செய்ய அவரது வீட்டை ஏலத்திற்கு விட இருப்பதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வீடு ஏலம்
தமிழ் சினிமா உலகில் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாத நடிகையாக திகழ்ந்து மரணமடைந்த ஸ்ரீவித்யாவின் வீட்டை ஏலத்திற்கு விட இருப்பதாக வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

30 வருடங்களுக்கும் மேலாக
மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை ஸ்ரீவித்யா கடந்த 2006-ல் திருவனந்தபுரத்தில் தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார். முப்பது வருடங்களாக சினிமாவில் நடித்து தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிப் படங்களில் பிரபல நடிகையாக திகழ்ந்து வந்தார்.

சென்னையில் வீடு
ஶ்ரீவித்யாவுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு சென்னை அபிராமபுரத்தில் இருக்கிறது. இந்த வீட்டை அவரின் சகோதரர் நிர்வகித்து வருகிறாராம். இந்த குடியிருப்பில் தற்போது நடன பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.

வரி பாக்கி
ஶ்ரீதிவ்யா செலுத்தவேண்டிய வருமான வரியை நீண்ட நாளாக செலுத்தாமல் பாக்கி வைத்திருக்கிறார்களாம். இதனால் வருமான வரித்துறையினர் இன்று அபிராமபுரம் வீட்டில் சோதனை நடத்தினர்.

வீடு ஏலம்
இந்த நிலையில் ஸ்ரீவித்யாவின் வருமான வரி பாக்கியை ஈடு செய்ய அவரது அபிராமபுரம் வீட்டை ஏலத்தில் விட வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது. 1250 சதுர அடி கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு மார்ச் 27-ம் தேதி ஏலத்திற்கு வருகிறது. அதன் உத்தேச மதிப்பு ரூ. 1 கோடியே 17 லட்சத்து 10 ஆயிரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரித்துறை அறிவிப்பு
இது குறித்து வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீவித்யாவிடம் இருந்து வர வேண்டிய வருமான வரி பாக்கி, வட்டி, ஏலச் செலவுத் தொகையை வசூல் செய்வதற்காக அவரது வீடு ஏலம் விடப்படுவதாக விளக்கம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











