"பவானி ஆண்ட்டி"க்கு நேத்து பர்த்டே.. உங்களுக்குத் தெரியுமா கணபதி?
சென்னை: சில நேரங்களில் சில விஷயங்கள் நமது மனதில் பளிச்சென பதிந்து போய் விடும். அவ்வளவு சீக்கிரம் அதை மறக்க முடியாது. அப்படி ஒரு விஷயம்தான் பவானி ஆண்ட்டி...!
இந்த ஆண்ட்டியை சில நாட்களுக்கு முன்பு வரை யாருக்குமே தெரியாது.. ஆனால் இப்போது பவானி ஆண்ட்டி என்றால் பச்சைப் புள்ளை கூட பளிச்சென சிரிக்கும். அதுக்காகவே மணிக்கு ஒரு கை கொடுக்கலாம்...!
ஓ காதல் கண்மணியின் ஹீரோயின் வேண்டுமானால் நித்யா மேனனாக இருக்கலாம்.. ஆனால் படத்தைப் பார்த்த ரசிகர்களின் மனம் கவர்ந்த மாறிப் போனவர் இந்த பவானி ஆண்ட்டிதான்.

லீலா சாம்சன்.. இவர்தான் ஓ காதல் கண்மணியில் பவானி ஆண்ட்டி என்ற கேரக்டரில் அவ்வளவு இயல்பாக அழகாக, எதார்த்தமாக நடித்தவர். அவர் பேசிய வசனங்கள் மணிரத்தினம் பாணி வசனம் என்றாலும் கூட அதைக் கூட அழகுபடுத்தி நேர்த்தியாக்கியவர் இந்த நடனப் பாவை.
லீலா சாம்சனுக்கு நேற்று பிறந்த நாள். பரதநாட்டியக் கலைஞர், நடன மாஸ்டர், எழுத்தாளர், ஒரு முறை சென்சார் போர்டு தலைவர் என பன்முகம் கொண்டவர் லீலா.
1951ம் ஆண்டு பிறந்த லீலா மேல்மட்ட மக்கள் மத்தியில்தான் பிரபலமாக இருந்தார். இன்று எல்லோருக்கும் தெரிந்த முகமாக மாறியுள்ளார். கலாஷேத்திரா தலைவர், சங்கீத நாடக அகாடமி தலைவர், சென்சார் போர்டு தலைவர் என பல பதவிகளை வகித்துள்ளார்.
தற்போது நடிகையாகவும் அவதாரம் எடுத்து விட்டார். ஆனால் எல்லா இயக்குநர்களின் படங்களிலும் நடிப்பாரா அல்லது மணி ரத்தினம் போன்றவர்களின் படங்களில் மட்டும் நடிப்பாரா என்பதுதான் தெரியவில்லை.
சரி.. ஆண்டிக்கு வயசு என்ன தெரியுமா... ஜஸ்ட் 64தான்.
எப்படியோ.. எல்லார் மனதையும் நனைய வைத்த இந்த அன்புக்குரிய ஆண்ட்டிக்கு மறக்காமல் பிலேட்டட் பர்த்டே வாழ்த்துகளைத் தெரிவிப்போம்.


Click it and Unblock the Notifications











