மக்களும்.. மகேசனும் தான் முடிவு செய்யணும்.. அரசியல் என்ட்ரிக்கும் லெஜண்ட் சரவணன் ரெடியாகிறாரா?
சென்னை: தி லெஜண்ட் படத்தின் மூலம் இந்த ஆண்டு கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமான லெஜண்ட் சரவணன் அரசியல் என்ட்ரி தொடர்பான கேள்விக்கு அளித்த பதில் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் மூலம் ஜவுளி வியாபாரம் செய்து வந்த சரவணன் அண்ணாச்சி தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா, தமன்னா என முன்னணி நடிகைகளுடன் நடித்து வந்தார்.
விட்டா சினிமாவில் நடிக்க வந்து விடுவார் போல என மீம்கள் பறக்க, அதிலும் ஒரு கை பார்த்து விடுவோமே என உண்மையாகவே தி லெஜண்ட் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார்.

2022ன் அறிமுக நடிகர்
இந்த ஆண்டு அறிமுகமான கோலிவுட் நடிகர்கள் பட்டியலில் சூப்பராக இணைந்து விட்டார் லெஜண்ட் சரவணன். இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். யாஷிகா ஆனந்த், ராய் லக்ஷ்மி உள்ளிட்ட பிரபல நடிகைகள் பாடல்களுக்கு குத்தாட்டம் போட்டிருந்தனர்.

பெண்கள் சூழ் உலகில்
தி லெஜண்ட் படத்தின் டிரைலர் லாஞ்ச் நிகழ்ச்சியில் கூட பிரபல நடிகர்களை அழைக்காமல் 10 டாப் நடிகைகளை களமிறக்கி தி லெஜண்ட் சரவணா இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை அனைவரையும் கண்டு வியக்க வைத்தார். இந்நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் சீரியல் நடிகைகள் சூழ தி லெஜண்ட் சரவணன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது.

அரசியல் ஆசை
சினிமாவில் நடிகர்களாக அறிமுகம் ஆவதே அடுத்து அரசியலில் நுழைந்து சிஎம் ஆகும் நோக்கத்துடன் தான் என காமெடி காட்சிகளில் கலாய்ப்பது போல ஏகப்பட்ட நடிகர்கள் சினிமா ஆசையுடன் கட்சித் தொடங்கி நடத்தி வருகின்றனர். சில பிரபலங்கள் பெரும் சாதனை படைத்து சிஎம் ஆனது தான் அந்த ஆசைக்கே காரணம் என்கிற நிலையில், லெஜண்ட் சரவணனும் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.

மக்கள் கையிலும் மகேசன் கையிலும்
அரசியல் ஆசை இல்லாத நடிகர்களிடம் அரசியல் பற்றிய கேள்வியை எழுப்பினால், அய்யோ நானெல்லாம் வரமாட்டேனுங்க என ஒரே கும்பிடு போட்டு விடுவர். ஆனால், அரசியலுக்கு வருவீங்களா என லெஜண்ட் சரவணனிடம் செய்தியாளர்கள் கேட்ட நிலையில், "அடுத்த படத்துக்காக ரெடியாகி வருகிறேன். அந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்ட அப்டேட்டுகளை கூடிய விரைவில் அறிவிப்பேன். அரசியல் வருகை என்பது அந்த மக்களும் மகேசனும் தான் முடிவு செய்யவேண்டும். அரசியலில் மக்களின் சிந்தனை மற்றும் எண்ணங்கள் ரொம்ப வேகமாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் கூப்பிட்டால் வருவேன்" எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











