கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த..'எங்கிருந்தாலும் வாழ்க' ஏஎல் ராகவன் மரணம்.. திரையுலகம் இரங்கல்!'
சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகர் ஏ.எல்.ராகவன் சென்னையில் இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 87.
பழம்பெரும் திரைப்படப் பின்னணிப் பாடகர் ஏ.எல்.ராகவன், தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ளார்.
1950-களில் இருந்து 1970-கள் வரை தமிழ்திரைப்பட பாடல்களில் கொடி கட்டிப் பறந்தவர் ராகவன்.

பாடகராக அறிமுகம்
1947-ஆம் வருடம் கிருஷ்ண விஜயம் என்ற படம் மூலம் நடிகராக சினிமாவுக்கு வந்தவர் இவர். 1950-இல் வெளிவந்த 'விஜயகுமாரி' என்ற படத்துக்காக ஒரு பாடலை பாடினார். குமாரி கமலாவுக்காக, பெண் குரலில் அவர் இந்த பாடலை பாடியதன் மூலம் பாடகராக அறிமுகமானார். அவர் குரல் ஈர்ப்பதாக இருக்க, தொடந்து அவருக்கு பாடல் வாய்ப்புகள் வந்தன.

எங்கிருந்தாலும் வாழ்க
தமிழ் பாடல்களுடன் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தின் 'எங்கிருந்தாலும் வாழ்க' போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களையும் பாடி இருக்கிறார். மேலும் பொம்பளை ஒருத்தி இருந்தாளாம், சீட்டுக்கட்டு ராஜா, என்ன வேகம் நில்லு பாமா, அங்கமுத்து தங்கமுத்து உள்பட பல ஹிட் பாடல்களை பாடியுள்ளர்.

அதிகமான வாய்ப்பு
கடைசியாக கடந்த 2014 ஆம் ஆண்டு, ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்துக்காக ஷான் ரோல்டன் இசையில் பாடியிருந்தார். இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு ஆகியோர் இவருக்கு அதிகமான வாய்ப்புக்களை வழங்கினர்.
1951-இல் வெளிவந்த சுதர்ஸன் என்ற படத்தில் கண்ணனாக நடித்துள்ளார். கல்லும் கனியாகும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.

நடிகை எம்.என்.ராஜம்
கல்லும் கனியாகும், கண்ணில் தெரியும் கதைகள் ஆகிய படங்களைத் தயாரித்துள்ளார். கண்ணில் தெரியும் கதைகள் படத்தில் ஜி.கே.வெங்கடேஷ், சங்கர் கணேஷ், கே.வி.மகாதேவன், டி.ஆர்.பாப்பா, இளையராஜா ஆகிய 5 இசையமைப்பாளர்களை இசையமைக்க வைத்தார். ஏ.எல்.ராகவனின் மனைவி, பிரபல நடிகை எம்.என்.ராஜம். இவர்களுக்கு பிரம்ம லக்ஷமண் என்ற மகனும் மீனா என்ற மகளும் உள்ளனர். இருவரும் பெங்களூரில் வசித்து வருகின்றனர்.

கொரோனா அறிகுறி
சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த ஏ.எல்.ராகவனுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணமடைந்தார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











