கதை வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி லிங்கா குழு மனு
லிங்கா திரைப்படக் கதை வழக்கில், அந்தக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் கோரி மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் புதன்கிழமை புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
லிங்கா திரைப்படம் தொடர்பான கதைத் திருட்டு வழக்கு மதுரை மாவட்ட கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது லிங்கா திரைப்படக் குழுத் தரப்பில் படத்தின் கதையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மனு நீதிபதி விஸ்வநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, லிங்கா திரைப்படத் தயாரிப்பாளர் தரப்பில் ஆஜரான வக்கீல் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், லிங்கா திரைப்படக் கதையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உள்ளிட்டோரிடம் கையெழுத்துப் பெற வேண்டி உள்ளது.
அவர்கள், தற்போது படப்பிடிப்பு தொடர்பாக வெளியூர்களில் இருப்பதால் கையெழுத்துப் பெற முடியவில்லை. எனவே, கூடுதலாக ஒரு நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதி, மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











