லிங்கா விவகாரம்.. ரஜினி வீட்டு முன் "மெகா பிச்சை" எடுக்கும் போராட்டம் நடத்தப் போகும் விநியோகஸ்தர்கள்
சென்னை: ரஜினி நடித்த லிங்கா படம் எதிர்பார்த்த லாபத்தை தராததால், இழப்பை ஈடு செய்ய வலியுறுத்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த விநியோகஸ்தர்கள் முடிவு செய்துள்ளனர்.
கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த படம் லிங்கா. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும், எனவே பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு இழப்பீடு தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப் பட்டது.
இந்நிலையில், திருச்சி-தஞ்சை விநியோகஸ்தர் விஜயராகவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இழப்பீடு...
‘லிங்கா' படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. எனவே, விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி இழப்பை ஈடுசெய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தோம்.

உண்ணாவிரதம்...
இதற்கு சரியான பதில் இல்லாததால், கடந்த ஜனவரி 10-ந்தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் இருந்தோம். அதன்பின்பு எங்களை அழைத்த விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம், இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக கூறினார்.

வரவு - செலவு கணக்குகள்...
அதைத்தொடர்ந்து வரவு-செலவு கணக்குகளை ஒப்படைத்தோம். விரைவில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று கூறியதையடுத்து, அடுத்தகட்ட போராட்டங்களில் ஈடுபடாமல் அமைதி காத்தோம்.

ரஜினி வீட்டு வாசலில்...
எனவே, இந்த பிரச்சினை தொடர்பாக தமிழகம் முழுவதும் மக்களை சந்தித்து ‘மெகா பிச்சை' என்ற பெயரில் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்த இருக்கிறோம். ரஜினிகாந்த் வீட்டு வாசலில் இருந்து போராட்டத்தை தொடங்குவோம்.

முதல் பிச்சை...
பிரபல அரசியல் கட்சித்தலைவர் ஒருவர் முதல் பிச்சையை போட்டு போராட்டத்தை தொடங்கி வைக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறார். போராட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











