நூற்றுக்கும் அதிகமான நகரங்களில் இந்தி லிங்கா... வரவேற்பு எப்படி?
இந்தியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ரஜினிகாந்தின் லிங்கா படம் எதிர்ப்பாராத வெற்றியைப் பெற்றுள்ளது.
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடித்த லிங்கா படம் தமிழ், தெலுங்கில் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளியானது. இந்தப் படத்துக்கு வரலாறு காணாத ஒபனிங் வசூல் கிடைத்தது. மூன்று தினங்களில் ரூ 104 கோடியை வசூலித்த இந்தப் படம், இப்போது 20 நாட்கள் தாண்டிய நிலையில் ரூ 200 கோடியை நெருங்கிக் கொண்டுள்ளது.
இத்தனைக்கும் இந்தப் படம் குறித்து வந்த எதிர்மறைக் கருத்துக்களும் விமர்சனங்களும் கொஞ்சமல்ல. படம் ஓடிக் கொண்டிருக்கும்போதே பெரிய நஷ்டம் என்ற குற்றச்சாட்டுகளும் வெளியாகின.

கேரளாவில் எந்த மலையாளப் படமும் சரியாகப் போகாத நிலையில் லிங்கா இன்னமும் ஓடிக் கொண்டுள்ளது. ஆந்திராவில் ரூ 20 கோடிக்கும் மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது. கர்நாடகத்தில் ரூ 12 கோடி வசூலாகியுள்ளது.
இந்த நிலையில் லிங்காவின் இந்திப் பதிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வட மாநிலங்களில் வெளியானது.
தமிழ், தெலுங்கில் இத்தனை எதிர்மறை விமர்சனங்கள் இருந்ததால், படத்தை பெரிய அளவில் விளம்பரப்படுத்தாமல் வெளியிட்டனர். 700க்கும் அதிகமாக அரங்குகளில் இந்தி லிங்கா வெளியானது. மும்பையில் மட்டும் 65க்கும் அதிகமான அரங்குகளில் திரையிடப்பட்டது.
டெல்லியில் 40 அரங்குகளிலும், புனே மற்றும் சுற்றுப் புறப் பகுதிகளில் 30 அரங்குகளிலும் படம் வெளியானது.
இவை தவிர, லக்னோ, பாட்னா, சண்டிகர், குர்கான், அகமதாபாத், போபால், கொல்கத்தா, அமிர்தசரஸ், பரெய்லி, அஜ்மீர், ஜலந்தர், ஜெய்ப்பூர், தன்பாத், டேராடூன், காந்தி நகர், கோவா, ஹோஷியார்பூர், இந்தூர், ஜபல்பூர், கான்பூர், குல்லு, லாத்தூர், லூதியானாஸ மீரட், உஜ்ஜெயினி, லூதியானா, மொஹாலி, மதுரா, மாலேகான், நாக்பூர், ராய்பூர், சிலிகுரி, ஹால்தியா, வதோத்ரா, உதய்பூர் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் வெளியாகி, ஓடிக் கொண்டுள்ளது.
பிவிஆர் கைவசம் உள்ள 400-க்கும் மேற்பட்ட மால்களில் லிங்கா திரையிடப்பட்டுள்ளது.
முதல் வாரம் முடியவிருக்கும் நிலையில் அனைத்து அரங்குகளிலும் படம் நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டுள்ளது. எதிர்ப்பார்ப்பு குறைவாக இருந்ததால், வட இந்தியாவில் இந்தப் படம் மக்களைத் திருப்திப்படுத்தியுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











