ஓயாத லிங்கா பஞ்சாயத்து... ரஜினியின் அடுத்த படத்துக்கு ரெட்!
சென்னை: லிங்கா' படத்தின் பிரச்சினை இன்னும் தீராதக் காரணத்தால் ரஜினி படங்களுக்கு ரெட் போடுவதற்கான ஆலோசனையில் விநியோகஸ்தர்கள் இறங்கி உள்ளனர். இதனால் ரஜினியின் அடுத்த படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 12, 2014 அன்று ரஜினி நடிப்பில் வெளியானது 'லிங்கா'. பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம், விநியோகஸ்தர்களுக்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் லிங்கா திரைப்படம் மக்களிடையே வரவேற்பு பெறாமல் தோல்வியை தழுவியது. இதனால் ஏற்பட்ட பெரும் நஷ்டம் காரணமாக தொடர்ச்சியாக போராட்டங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என விநியோகஸ்தர்கள் இறங்கினர். இதனைத் தொடர்ந்து மொத்த நஷ்டமான 33 கோடிக்கு தயாரிப்பாளர் சங்கம், ரஜினி தரப்பில் திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டார்கள்.
அப்பேச்சுவார்த்தையில் இறுதியில் 12.5 கோடி ரஜினிகாந்த் தரப்பில் தாணு மற்றும் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கொடுத்ததாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார். அப்பணத்தில் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகியோருக்கும் பிரித்துக் கொடுக்கும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்.
ஆனால், 'லிங்கா' பிரச்சினையில் முன்னின்று செயல்பட்ட சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்களுக்கு மட்டும் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை இன்னும் கொடுக்கவில்லை. இதற்கான பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இன்னும் எட்டப்படவில்லை.
இதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் 'லிங்கா' பிரச்சினையை விநியோகஸ்தர்கள் கையில் எடுத்திருக்கிறார்கள். இம்முறை ரஜினி தலையீட்டு பணம் பரிவர்த்தனை பிரச்சினைகள் முடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க இருக்கிறார்கள்.

ரஜினி பட பிரச்சினை
இது தொடர்பாக நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய விநியோகஸ்தர்கள், "ஆரம்பத்தில் பன்னிரெண்டரை கோடி ரூபாய் தருவதாக ஒப்புக் கொண்டனர். அதுமட்டுமில்லாமல் வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு ரஜினி குறைந்த நாள் கால்ஷீட்டில் ஒரு படம் நடித்து தருவார் என்றும், அந்தப்படத்திலிருந்து வரும் லாபத்தை வைத்து எஞ்சிய லிங்கா பட நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ளுங்கள் என்றும் ரஜினி தரப்பிலிருந்து திருப்பூர் சுப்பிரமணி கூறியிருந்தார்.

பாக்கி பணம் எங்கே?
அனைத்தையும் ஏற்றுக் கொண்டு லிங்கா பிரச்னை முடிந்துவிட்டதாக முன்னர் அறிவித்திருந்தோம். ஆனால் தரவேண்டிய பன்னிரென்டரை கோடியில் 5.9 கோடி மட்டுமே தந்தனர். மீதி 9.1 கோடி ரூபாய் தரவில்லை.

ரஜினியின் அடுத்த படம்
பணத்தைப் பற்றி தாணுவிடம் கேட்டால் திருப்பூர் சுப்பிரமணியிடம் இருக்கிறது என்கிறார், திருப்பூர் சுப்பிரமணியனிடம் கேட்டால் மதுரை அன்புச் செழியனிடம் இருக்கிறது என்கிறார். எங்களுக்கு பணமும் தரவில்லை, படமும் நடித்து தராமல், தற்பொழுது தாணு தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே வேந்தர் மூவீஸ் நிறுவனத்திற்கு ரஜினி ஒரு படம் நடித்து தரவேண்டும். இல்லையென்றால் கூடுதலாக 15 கோடி ரூபாய் தரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

ரஜினிக்கு ரெட் கார்டு
மேலும், 'லிங்கா' பிரச்சினை முடியும்வரை ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் படங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் என இரண்டு தரப்பும் ரெட் கார்டு போட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதனால் மீண்டும் 'லிங்கா' பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.

யாரும் திரையிடமாட்டார்கள்
தமிழ் திரையுலகில் 'ரெட்' என்பது தடை போல தான் கருதப்படுகிறது. ஒருவேளை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ரஜினி படங்களுக்கு 'ரெட்' போட்டுவிட்டார்கள் என்றால், 'ரெட்' நீங்கும் வரை எந்த ஒரு ரஜினி சம்பந்தப்பட்ட படத்தை யாருமே வாங்க மாட்டார்கள், திரையிடவும் மாட்டார்கள்.

உழைப்பாளிக்கு ரெட்
திரையுலகில் இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளியான 'உழைப்பாளி' படத்தின் பிரச்சினைக்காக விநியோகஸ்தர்கள் தரப்பில் ரெட் போடப்பட்டது. அப்போது ரஜினி, "நீங்கள் ரெட் போட்டால் எனக்கு கவலையில்லை. உங்களுடைய உதவி இல்லாமல் நான் திரையரங்குகளில் நேரடியாக வெளியிடுவேன்" என்று அதிரடியாக கூற, விநியோகஸ்தர்கள் இறங்கிவந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி ரெட் விலக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











