பலத்த மழையிலும் விடாது நடக்கும் லிங்கா படப்பிடிப்பு
கர்நாடகத்தின் ஷிமோகா பகுதியில் பலத்த மழையிலும் விடாது நடக்கிறது ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு.
ரஜினி நடித்துவரும் 'லிங்கா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர்.
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, லிங்கினமக்கி அணை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.

3000 பேர்
இதற்காக படக்குழுவினர் கொட்டகைகள் அமைத்து அங்கு முகாமிட்டுள்ளனர். துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 3000-க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கியுள்ளனர்.இவர்களில் பெருமளவினர் சென்னையிலிருந்து சென்றவர்கள்.

வேக வேகமாக
டிசம்பர் 12-ந்தேதி தனது பிறந்த நாளில் 'லிங்கா' படம் ரிலீசாகும் என ரஜினி அறிவித்து உள்ளார். எனவே படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி வருகிறார் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்.

கடும் மழை
இந்த நிலையில் 'லிங்கா' படப்பிடிப்பு நடக்கும் பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்பகுதி சேறும் சகதியுமாகிவிட்டது. இதனால் படப்பிடிப்பு சாதனங்களைக் கூட தூக்கிச் செல்ல முடியாமல் படக்குழுவினர் அவதிக்குள்ளாகினர்.

ஓரிரு வாரத்தில்...
ஆனாலும் திட்டமிட்டபடி படத்தை முடிக்க வேண்டும் என்ற வேகத்தில் படப்பிடிப்பை நிறுத்தாமல் நடத்தி வருகின்றனர். ஓரிரு வாரத்தில் முழு படத்தையும் முடித்து விட்டு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார். நாயகிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடிக்கின்றனர். சந்தானம் காமெடி கேரக்டரில் வருகிறார்.

முதல் போஸ்டர்
லிங்காவின் முதல் பார்வை போஸ்டர் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











