சண்டகோழி 2 ட்ராப்... விவகாரத்தை பெரிதாக்க விரும்பவில்லை!- லிங்குசாமி
சண்டகோழி 2 படம் கைவிடப்பட்டது தொடர்பாக விஷால் புகார்களுக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று இயக்குநர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.
விஷால் நடிப்பில் சண்டகோழி 2 படம் ஆரம்பிப்பதற்குப் பதிலாகத் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனைக் கொண்டு புதிய படத்தைத் தொடங்க உள்ளார் லிங்குசாமி. இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சண்டகோழி 2 விவகாரம் தொடர்பாக விஷால் - லிங்குசாமி இடையே மோதல் எழுந்துள்ளது.
இதுகுறித்து ஒரு பேட்டியில் விஷால் கூறுகையில், "இந்தப் படம் ஆரம்பமாக நான் 14 மாதங்கள் காத்திருந்தேன். இது தொடங்காததால்தான் கதகளி, மருது ஆகிய படங்களில் நடித்தேன்.
15 நாள்களுக்கு முன்பு வரை லிங்குசாமி, அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் ஆரம்பிப்பது குறித்து எனக்குத் தெரியாது. என்னிடம் சொல்லாமலேயே அவர் அடுத்தப் படத்தை ஆரம்பித்துவிட்டார். லிங்குசாமிக்கு முன்பணமும் அளித்துள்ளேன். இந்த நஷ்டத்தைச் சுமூகமான முறையில் தீர்க்க நினைத்தேன். ஆனால் அது சரியாக வரவில்லை. இதனால் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளேன்," என்றார்.
விஷாலின் இந்தப் புகார் குறித்து லிங்குசாமியிடம் கேட்டபோது, "இதற்குப் பதிலளித்து பிரச்னையை ஊதிப் பெரிதாக்க விரும்பவில்லை. என்னுடைய அடுத்தப் படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கிறார். அதனால்தான் சண்டகோழி 2 கைவிடப்பட்டுள்ளது. வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை," என்றார்.


Click it and Unblock the Notifications











