லைக்கா வசமானது நானும் ரவுடிதான், விசாரணை...
தனுஷ் தயாரித்திருக்கும் 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களின் உரிமையை லைக்கா நிறுவனம் கையகப்படுத்தியது. கத்தி படத்தில் மிகப்பெரிய பிரச்சினைகளை சந்தித்த லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது இரண்டு தமிழ் திரைப்படங்களின் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தினேஷ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் 'விசாரணை'. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 'லாக் அப்' என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகி உள்ளது.

தனுஷ் தயாரிப்பு
தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன், ராதிகா, ஆர்ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்க தொடங்கப்பட்ட படம் 'நானும் ரவுடிதான்'. அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தை 'போடா போடி' இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார்.

அக்டோபரில் ரிலீஸ்
'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வந்தன. "அக்டோபர் 2ம் தேதி 'நானும் ரவுடிதான்' படத்தை வெளியிடுவது என்று முடிவு செய்திருப்பதாக இப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீஸர், பாடல்கள் விரைவில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறோம்" என்று தனது டுவிட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவன் தெரிவித்திருந்தார்.

லைக்கா வெளியீடு
இந்த இரு படங்களின் விநியோக உரிமையைக் கைப்பற்ற பல்வேறு நிறுவனங்கள் போட்டியிட்டு வந்தன. இறுதியாக லைக்கா நிறுவனம் இவ்விரண்டு படங்களின் உரிமையையும் ஒன்றாக கையகப்படுத்தியிருக்கிறது.

பிரச்சினை வருமோ
'விசாரணை' படத்தினை உலகளவில் வெளியிட அனைத்து உரிமைகளையும் மற்றும் 'நானும் ரவுடிதான்' படத்தின் தமிழக உரிமையையும் லைக்கா நிறுவனம் வசப்படுத்தி இருக்கிறது. விஜய் நடித்த கத்தி படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்த காரணத்தால் கடும் நெருக்கடியை சந்தித்தது. கத்தி பட ரிலீஸ் நேரத்தில் தமிழ் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் விசாரணை, நானும் ரவுடிதான் படங்களின் உரிமையை கைப்பற்றியுள்ளது லைக்கா.


Click it and Unblock the Notifications











