மிகப்பெரிய மைல் கல்.. 400 கோடி வசூலை தாண்டிய பொன்னியின் செல்வன்.. லைகா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சென்னை: விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களின் வசூல் குறித்த விவரங்கள் சமீப காலமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்து வருகிறது.
ஆளுக்கொரு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை சொல்லி ரசிகர்கள் இடையே சண்டையை மூட்டி வருகின்றனர்.
ஆனால், லைகா நிறுவனம் அந்த தப்பை எல்லாம் செய்யாமல் தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

400 கோடி அறிவித்த லைகா
பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்றே 400 கோடி வசூலை கடந்து விட்டதாக பாக்ஸ் ஆபிஸ் டிராக்கர்கள் எல்லாம் அறிவித்த நிலையில், தற்போது தான் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் 400 கோடிக்கும் அதிகமான வசூல் சாதனையை அடைந்துள்ளது என்கிற அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

தியேட்டருக்கே வராதவர்கள் கூட
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் முதல் 97 வயது தாத்தா, பாட்டி வரை இதுவரை தியேட்டருக்கே வராத பலரையும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பார்க்க வரவழைத்துள்ளது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 2.0, விக்ரம் படங்களை தொடர்ந்து 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த தமிழ்ப் படமாக பொன்னியின் செல்வன் மாறி உள்ளது.

கல்கியின் மேஜிக்
பொன்னியின் செல்வன் கதையை எழுதி ஒவ்வொரு ஆண்டும் புத்தக திருவிழாவின் போதே அதிக விற்பனையாகும் புத்தகமாக பொன்னியின் செல்வனை மாற்றிக் காட்டிய அதே கல்கியின் மேஜிக் தான் இப்படி 400 கோடிக்கும் அதிகமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வசூல் செய்ய காரணம் என ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகின்றனர்.

அசத்திய நடிகர்கள்
ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், சுந்தர சோழராக பிரகாஷ் ராஜ், பழுவேட்டரையர்களாக சரத்குமார், பார்த்திபன், பூங்குழலியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி, வானதியாக சோபிதா துலிபாலா என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நடிப்பில் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி காட்சி அளித்த நிலையில், புத்தகம் படித்தவர்களுக்கு அந்த கதாபாத்திரங்கள் திரையில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்பதை பார்த்து பிரம்மிப்பாகவே மாறியது.

500 கோடி கன்ஃபார்ம்
இந்த வாரமும் பொன்னியின் செல்வன் படத்துக்கு போட்டியாக எந்தவொரு பெரிய தமிழ் படமும் வெளியாகவில்லை. கன்னடத்தில் ஹிட் அடித்த காந்தாரா படம் தான் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. தீபாவளியை கடந்தும் பொன்னியின் செல்வன் இதே வேகத்தில் ஓடினால் 500 கோடியை தாண்டி புதிய உச்சத்தையே தொடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றவர்களும் அறிவிப்பார்களா
அடுத்து பொங்கலுக்கு அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு படங்கள் வெளியாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா பொன்னியின் செல்வன் படத்துக்கு அதிகாரப்பூர்வ பாக்ஸ் ஆபிஸை அறிவித்து வருவதை போலவே அவர்களும் அறிவிப்பார்களா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











