பட வெளியீட்டையே திருவிழாவாக மாற்றுபவர் ரஜினி ஒருவர்தான்! - லைகா ராஜு மகாலிங்கம்
சென்னை: ரஜினியின் கபாலி படவெளியீடு எந்த அளவு முக்கிய நிகழ்வாக சினிமா உலகில் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதுவரை உலக சினிமாவில் பார்த்திராத நிகழ்வு இது.

படத்துக்கு கோடி கோடியாக செலவழித்து எந்த விளம்பரமும் செய்யவில்லை. ஒரு பக்கம் ரசிகர்கள் தங்கள் சொந்த செலவில் இசை வெளியீட்டு விழா நடத்தி, ஊரெங்கும் சுவர்களில் விளம்பரங்கள் எழுதி வருகின்றனர்.
இன்னொரு பக்கம் ரஜினி என்ற பிராண்டை மையப்படுத்தி பிரமாண்ட முறையில் கபாலியை விளம்பரப்படுத்தி, அதன் மூலம் தங்களையும் விளம்பரப்படுத்தி வருகின்றன கார்ப்பொரேட் நிறுவனங்கள். ஏர் ஏசியா கபாலி ரஜினி விமானம் பறக்கவிட்டுள்ளது. முத்தூட் நிறுவனம் ரஜினி படத்துடன் தங்க, வெள்ளி நாணயங்களை வெளியிட்டு வாய் பிளக்க வைத்துவிட்டது.
இதையெல்லாம் பார்த்த லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஹெட் ராஜூ மகாலிங்கம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படிக் கூறியிருக்கிறார்:
"எல்லோரும் தங்கள் படங்களை திருவிழா சமயத்தில் வெளியிட விரும்புவார்கள். ஆனால் நீங்கள் (ரஜினி) மட்டும்தான் உங்கள் பட வெளியீட்டையே திருவிழாவாக மாற்றுவீர்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











