2.0 விழா... சொதப்பிய லைகா லைவ்!
ரஜினியின் 2.0 படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளை நேரலையாக ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருந்த லைகா நிறுவனம், திட்டமிட்டபடி ஒளிபரப்பாமல் சொதப்பியது.
பின்னர் பதிவு செய்யப்பட்ட வீடியோவை வெளியிட்டது.
லட்சக்கணக்கான ரஜினி ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியைக் காண ஆவலாக இருந்தனர். விழா மும்பையில் நடந்ததால் ஏராளமான தமிழ் ரசிகர்கள், நேரலை ஒளிபரப்பில் பார்த்துக் கொள்ளலாம் என லைகாவின் யுட்யூப் சேனலையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஞாயிற்றுக் கிழமை 6 மணிக்கு ஒளிபரப்பைத் தொடங்கப் போவதாக அறிவித்திருந்தது லைகா. ஆனால் 6 மணி தாண்டியும் வெறும் செவன் அப் விளம்பரமாகப் போட்டுத் தாக்கிக் கொண்டிருந்தனர். பலர் பொறுமை இழந்து லைகாவைத் திட்ட ஆரம்பித்தனர்.
ஒரு கட்டத்தில் 25 ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் பார்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் படிப்படியாகக் குறைந்துவிட்டனர். சிறிது நேரத்தில் நேரலை ஒளிபரப்பு தொடங்கியது. ஆனால் சத்தம் இல்லாத ஊமைப்படம் பார்ப்பதைப் போன்றுதான் இருந்தது. பிறகு நேரலை ஒளிபரப்பை நிறுத்திவிட்டனர். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது.
இரவு 7 மணிக்குப் பிறகு, பதிவு செய்யப்பட்ட வீடியோவை ஒளிபரப்பினர். அதற்குள், விழா அரங்கிலிருந்து 2.0 படத்தின் முதல் தோற்றம், ரஜினி உள்ளிட்டோரின் பேச்சுகளை சமூக வலைத் தளங்களில் பகிர்ந்துவிட்டனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











