ஆனந்த விகடனை புல்லுருவி என திட்டிய விவேகா... செய்தியாளர்கள் எதிர்ப்பு!
பிரபல வார இதழான ஆனந்த விகடனை புல்லுருவி என பாடலாசிரியர் விவேகா திட்டியதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர் பத்திரிகையாளர்கள். இதைத் தொடர்ந்து அந்த வார்த்தையை வாபஸ் பெறுவதாக அவர் தெரிவித்தார்.
குற்றம் 23 படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினர் அருண் விஜய், இயக்குநர் அறிவழகன் உள்ளிட்ட படக் குழுவினர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அறிவழகன், நல்ல கருத்தை வலியுறுத்திய தன் படத்துக்கு குறைந்த மதிப்பெண் போட்ட விகடன் குழு, அப்படி எந்தக் கருத்தும் இல்லாத மாநகரம் படத்தின் மேக்கிங்கை வைத்து 50 மதிப்பெண் தந்துள்ளது வருத்தமாக உள்ளதாகக் கூறினார்.
உடனே குறுக்கிட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் கவிஞர் விவேகா... விடுங்க அறிவழகன்.. சில புல்லுருவிகள் அப்படித்தான். நல்ல விமர்சனம் தந்த மற்றவர்களுக்கு நன்றி சொல்லுங்கள் என்றார்.
இது அங்கு வந்திருந்த செய்தியாளர்கள் பலர், விவேகாவின் அந்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஒரு பத்திரிகையை புல்லுருவி என்று சொல்வதை நாங்கள் ஏற்க மாட்டோம் என்று கூற, உடனே விவேகா, 'நான் தனிப்பட்ட முறையில் அவர்களால் பாதிக்கப்பட்டுள்ளேன். அதனால் அப்படிச் சொன்னேன். வேண்டுமானால் அந்த வார்த்தையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்," என்றார்.
மேலும் குற்றம் 23 படத்துக்கான விமர்சனம் குறித்து விகடன் விமர்சனக் குழுவுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன் என்றும் விவேகா கூறினார்.


Click it and Unblock the Notifications











