மாலை நேரத்து மயக்கம்.. என்னை மயக்கியது - செல்வராகவன்
சென்னை: தனது மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் உருவாகியிருக்கும் மாலை நேரத்து மயக்கம் படத்தை ஒவ்வொருவரும் தமது ஜோடியுடன் கண்டுகளிக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் கூறியிருக்கிறார்.
இயக்குநர் செல்வராகவன் திரைக்கதை எழுத, அவரது மனைவி கீதாஞ்சலி மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கியிருக்கிறார். 2 வருடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை பார்த்த இயக்குநர் செல்வராகவன் ‘என்ன சொல்வது என்று தெரியவில்லை. தற்போது தான் என்னுடைய மனைவி கீதாஞ்சலி இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்' படத்தை பார்த்தேன், மெய்மறந்து போனேன். ஒவ்வொரு ஜோடியும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்' என்று படத்தைப் பாராட்டியிருக்கிறார்.
இப்படம் இடையில் சில பிரச்சினைகளை சந்தித்த போதும் கூட சமீபத்தில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் ஆகியவை ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனால் உற்சாகத்தில் இருக்கும் கீதாஞ்சலி செல்வராகவன் விரைவில் இப்படத்தை முடித்து திரைக்கு கொண்டுவருவதில் தற்போது மும்முரமாக இருக்கிறார்.
மாலை நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நாயகனாக பாலகிருஷ்ணன் மற்றும் நாயகியாக வாமிகா என்ற புதுமுகங்கள் நடித்து வருகிறார்கள். இசையமைப்பாளர் அம்ரித் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
காதலை அடிப்படையாக வைத்து உருவாகி வரும் மாலை நேரத்து மயக்கம், இளைய தலைமுறையினர் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











