தொடரும் மா சென்டிமென்ட்... மாயா வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, மாநகரம்!
நயன்தாரா நடித்த மாயா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பொட்டான்சியல் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதியபடத்துக்கு மாநகரம் என்று தலைப்பிட்டுள்ளனர்.
புதிய பாணி கதையை மக்கள் ரசனைக்கேற்ப வித்தியாசமாக புதியவர்களால் சரியான விகிதத்தில் கொடுக்கப்பட்டால், அதை மக்கள் வரவேற்பார்கள் என்பதை நிரூபித்த படம் மாயா. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஐதராபாத் போன்ற இடங்களில் வசூல் சாதனை செய்துள்ளது இந்தப் படம்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் தனது முதல் இன்னிங்சை இப்படம் மூலம் தமிழ் திரை உலகில் ஆரம்பித்துள்ளது பொட்டான்சியல் ஸ்டுடியோஸ்.
மாயா படத்தைத் தொடர்ந்து மாநகரம் படத்தை இரண்டாவது படைப்பாக தொடர்கிறது இந்நிறுவனம்.
வெவ்வேறு ஊர்களில் இருந்து நான்கு பேர், சென்னை மாநகரத்திற்கு வேலை தேடி செல்கிறார்கள். நான்கு பேரும் மாநகரத்தை எப்படிப் பார்க்கிறார்கள், அவர்களின் எதிர்ப்பார்ப்பை அந்த மாநகரம் எப்படி உடைத்தெரிகிறது... அவர்களை எப்படி நடத்துகிறது என்பதே இந்தப் படமாம்.
படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு இது முதல் படம். இதற்கு முன் குறும்படங்கள் இயக்கியுள்ளார்.
கதையில் வரும் நான்கு இளைஞர்களாக ஸ்ரீ, சந்தீப் இஷன், சார்லி, ராமதாஸ் நடிக்கிறார்கள். நாயகியாக ரெஜினா நடிக்கிறார். படத்தில் நாயகிக்கு கதையோடு ஒன்றி பயணிக்கும் வகையிலான நல்ல கதாபாத்திரம்.
படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக முடிவடைந்தது. எடிட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன.


Click it and Unblock the Notifications











