மணிரத்னம் ஹீரோக்களை ஒன்றிணைத்தது மாதவனின் 'இறுதிச்சுற்று'
சென்னை: நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் இறுதிச்சுற்று படத்தின் பாடல்களை படக்குழுவினர் இன்று வெளியிட்டனர்.
மாதவன், ரித்திகா சிங், ராதாரவி, நாசர் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் நடித்திருக்கும் படம் இறுதிச்சுற்று. தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை சுதா கொங்கரா இயக்கியிருக்கிறார்.
தமிழில் சி.வி.குமாரும், இந்தியில் ராஜ் குமார் ஹிரானியுடன் இணைந்து மாதவனும் இப்படத்தை தயாரித்து இருக்கின்றனர்.இந்தப் படத்தில் மாதவன் குத்துச்சண்டை பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் பாலா, சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பாலா இறுதிச்சுற்று பாடல்களை வெளியிட நடிகர் சூர்யா அதனை பெற்றுக் கொண்டார்.சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியாகி இருக்கும் பாடல்கள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஏய் சண்டக்காரா மற்றும் வா மச்சானே ஆகிய 2 பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படத்தின் நாயகி ரித்திகா சிங் படத்தில் தனுஷின் தீவிர ரசிகையாக நடித்திருக்கிறாராம்.
இந்த விழாவில் ஆய்த எழுத்து ஹீரோக்கள் சூர்யா, சித்தார்த் மற்றும் மாதவன் ஆகியோரை ஒரே மேடையில் பார்க்க முடிந்தது.இதன் மூலம் மணிரத்னம் ஹீரோக்கள் மீண்டும் ஒன்றிணைந்து விட்டனர் என்று அவர்களது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
7 வருடங்கள் கழித்து மாதவன் தமிழில் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளிவரும் படம் இறுதிச்சுற்று என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











